தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவர் செல்வராகவன். துள்ளுவதோ இளமை பட ஷூட்டிங்கின் பாதியிலிருந்து அந்தப் படத்தின் இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார் அவர். முதல் படம் அப்படி இப்படியான விமர்சனத்தை பெற இரண்டாவது படமாக காதல் கொண்டேன் படத்தை இயக்கினார். அதில் தனுஷ், சோனியா அகர்வால் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
காதல் கொண்டேன் படம்தான் தனுஷ் மற்றும் செல்வராகவன் வாழ்க்கையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது. அதுமட்டுமின்றி தமிழ் சினிமாவின் போக்கையும் மாற்றியது. அதுவரை காதல் படத்தில் வெறும் காதலை மட்டும் காட்டிக்கொண்டிருந்தவர்கள் மத்தியில் செல்வராகவன் வந்துதான் அதில் இருக்கும் தனிமையையும், ஒருதலை காதலையும் வித்தியாசமாக காண்பித்தார்.
அந்தப் படத்துக்கு பிறகு செல்வராகவனின் படைப்புக்கு எதிர்பார்ப்பு எழுந்தது. அந்த சமயத்தில்தான் 7ஜி ரெயின்போ காலனி படத்தை எடுத்தார். மிடில் கிளாஸ் பையனின் வாழ்க்கையை காட்சிப்படுத்திய செல்வா திக்கற்று திரியும் ஒருவனை காதல் எப்படி மாற்றுகிறது. அந்தக் காதல் கைகூடாமல் போன பிறகு அவன் எப்படி பாதிக்கப்படுகிறான் என்பதை அவ்வளவு எமோஷனலாக காட்சிப்படுத்தியிருப்பார். குறிப்பாக படத்தின் க்ளைமேக்ஸில் A Selvaraghavan Film என்று எண்ட் கார்டு போடும்போது யுவன் ஷங்கர் ராஜாவின் இசையும், செல்வராகவனின் காட்சிப்படுத்துதலும் ரசிகர்களின் கண்களில் நீரை வரவழைக்கக்கூடியது.
அந்தப் படத்துக்கு பிறகு தொடர்ந்து அவர் இயக்கிய படங்கள் வசூல் ரீதியாக சரியாக போகாவிட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்பட்டன. புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன் எல்லாம் காலங்கடந்து இப்போது கொண்டாடப்பட்டுக்கொண்டிருக்கிறது. கடைசியாக அவர் தனுஷ் எழுதிய கதையை நானே வருவேன் என்ற பெயரில் இயக்கினார். படம் தோல்வியை சந்தித்தது.
இதற்கிடையே பீஸ்ட் படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான செல்வராகவன் சாணிககயிதம், பகாசூரன் ஆகிய படங்களில் நடித்தார். தற்போது விஷால் நடிப்பில் உருவாகியிருக்கும் மார்க் ஆண்டனி படத்தில் நடித்திருக்கிறார். நடிகராக அவர் கலக்கினாலும் மீண்டும் இயக்கத்திற்கு வர வேண்டும் என்பதுதான் ரசிகர்களின் ஆசையாக இருக்கிறது.
அவர்களது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக ஆயிரத்தில் ஒருவன் படத்தின் இரண்டாம் பாகம் அறிவிப்பை வெளியிட்டார் செல்வராகவன். அதேபோல் கூடுதல் சர்ப்ரைஸாக 7ஜி ரெயின்போ காலனி 2வும் எடுக்கப்படும் என அறிவித்திருக்கிறார். முதல் பாகம் போலவே இந்த பாகத்திலும் ரவிகிருஷ்ணாதான் ஹீரோவாக நடிக்கிறார். ஆனால் முதல் பாகத்தில் அனிதா (சோனியா அகர்வால்) இறந்துவிட்டார் என்பதால் இரண்டாம் பாகத்தில் ஹீரோயின் விஷயத்தை எப்படி எடுத்து செல்லப்போகிறார் என்ற கேள்வியும், யார் ஹீரோயின் என்ற கேள்வியும் எழுந்திருந்தது.
இந்நிலையில் இரண்டாம் பாகத்தில் நடிப்பதற்கு அதிதி ஷங்கர் மற்றும் இவானா ஆகியோரிடம் பேச்சுவார்த்தை நடந்துவருகிறது என்றும் இவர்களில் யாரேனும் ஒருவர் நடிக்கலாம் என்றும் தகவல் வெளியாகியிருக்கிறது. அதேபோல் படத்துக்கு யுவன் ஷங்கர் ராஜாதான் இசையமைக்கிறார். அதனால் முதல் பாகம் போலவே இரண்டாம் பாகத்திலும் பாடல்கள் ஹிட்டாகும் என்ற நம்பிக்கை இருப்பதாக கூறும் ரசிகர்கள் நா. முத்துக்குமார் உயிரோடு இருந்திருந்தால் யுவன் – செல்வா – முத்து மேஜிக் இதிலும் நிகழ்ந்திருக்கும் ஆனால் அது மிஸ் ஆகிவிட்டது என சமூக வலைதளங்களில் கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.





