தமிழ் சினிமாவில் 1980களில் முன்னணி இயக்குனராக இருந்தவர் எஸ்ஏ சந்திரசேகர். அவருக்கு புரட்சி இயக்குனர் என்ற பட்டமும் அப்போது உண்டு. அன்றைய காலகட்டத்திலேயே அரசியல் சமூகம் நீதித்துறை சார்ந்த விஷயங்களை தனது படங்களில் பேசுபொருளாக்கி படங்களை இயக்கியவர். பல புரட்சிக்கரமான கருத்துகளை வெளிப்படையாக தனது படங்களில் சொன்னவர்.
சமீபகாலமாக படங்களில் எஸ்ஏ சந்திரசேகர் முக்கிய வேடங்களில் நடித்தும் வருகிறார். மாநாடு கொடி டிராபிக் ராமசாமி போன்ற பல படங்களில் அவரது நடிப்பு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. ஆரம்பத்தில் இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் மகன் விஜய் என்று அடையாளம் காணப்பட்ட நிலையில், இப்போது நடிகர் விஜயின் அப்பா எஸ்ஏ சந்திரசேகர் என்ற உயர்ந்த நிலைக்கு விஜய் வந்திருக்கிறார்.
கடந்தாண்டில் தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் இயக்கத்தை துவங்கிய நடிகர் விஜய், சமீபத்தில் தனது கட்சியின் 2ம் ஆண்டு துவக்க விழாவில் பங்கேற்று பேசினார். தனது மகன் விஜயின் கட்சி நிகழ்ச்சிகளில் அவ்வப்போது எஸ்ஏ சந்திரசேகர், தனது மனைவி ஷோபாவுடன் பங்கேற்று வருகிறார். ஆனால் அரசியல் கட்சியில் அவருக்கு எதுவும் பொறுப்பு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தது குறித்து அவரது அப்பா இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர், சமீபத்தில் ஒரு நேர்காணலில் கூறியதாவது, சினிமா என்பது ஒரு குறுகிய வட்டம். அதில் நாம் சம்பாதிக்கிறோம். கொஞ்சம் பேருக்கு உதவி பண்றோம். கொஞ்சம் பேரை படிக்க வைக்கிறோம்.
ஆனால் அரசியல் என்று போகும்போது அந்த ஒரு சமூக அக்கறை, நாட்டின் மேல் ஒரு பாசம், தமிழ் மேல தமிழ் மக்கள் மேல அந்த மக்களுக்கு ஏதாவது பண்ணனும். அப்படீன்னு ஒரு நெனைப்பு இருக்குது இல்லே. பெரிய விஷயம் அது. பணம் சம்பாதிக்கிறதை விட ஒரு நடிகராக பணம் சம்பாதிப்பதை விட நாட்டு மக்களுக்கு நல்லது பண்ணணும்.
மக்கள் கஷ்டப்பட்டு இருக்கறாங்க. நம்ம நாட்டை உயர்த்தணும், தமிழ்நாட்டை உயர்த்தணும் மக்களுக்கு ஏதாவது நல்லது பண்ணனும். அப்படீங்கற நெனைப்பு இருக்குதே, அந்த சமூக அக்கறை அது எல்லோருக்கும் வந்துடாது. அப்படி அவர் அரசியலுக்கு போறாரு அப்படீங்கறது ஒரு அப்பாவா சந்தோஷம்தான் தருது. மகிழ்ச்சியாக இருக்கிறது என்று இயக்குனர் எஸ்ஏ சந்திரசேகர் கூறியிருக்கிறார்.





