நடிகை ஜோதிகா, தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகையாக 1990.,2000ம் களில் இருந்தவர். அவர் நடித்த படங்களில் எல்லாமே, அவருக்கான முக்கியத்துவம் நிச்சயம் இருக்கும். ரஜினிகாந்த் ஹீரோவாக நடித்த சந்திரமுகி படத்திலேயே ஜோதிகாவுக்கு தான் அதிக முக்கியத்துவம் தரப்பட்டு, அவரது கேரக்டர் நேம்தான் படத்தின் டைட்டிலாக இருந்தது.
ஒரு கட்டத்தில் ஜோதிகா, சூர்யா காதல் திருமணம் செய்து கொண்டது தமிழ் சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது. துவக்கத்தில் சிவக்குமார் குடும்பம் சங்கடப்பட்டாலும், பின் ஜோதிகாவை தங்கள் மருமகளாக முழுமனதுடன் ஏற்றுக்கொண்டனர். திருமணத்துக்கு பிறகு ஒரு கட்டத்தில் மீண்டும் நடிக்கத் துவங்கினார் ஜோதிகா.
ஜோதிகாவை பொருத்த வரை எந்த மாதிரியான நடிப்பிலும் வெளுத்துவாங்கும் நடிப்பாற்றல் மிக்கவர். குடும்பப்பாங்கான கேரக்டராக இருந்தாலும், குறும்பான பெண் கேரக்டராக இருந்தாலும் ஜோதிகாவின் பெர்பாமென்ஸ் அசத்தலாக தான் இருக்கும். சந்திரமுகி படத்தில், கிளைமேக்ஸ் காட்சியில் நடித்த ஜோதிகாவின் அந்த மிரட்டலான நடிப்பை, படம் பார்த்த அனைவருமே சிலாகித்து பாராட்டினர்.
இப்போது மலையாளத்தில் அவர் நடித்த தி காதல் கோர் படம் பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது. ரசிகர்களின் பலத்த வரவேற்பை பெற்ற படமாக அது அமைந்திருக்கிறது. இந்த படத்தில் மலையாள சூப்பர் ஸ்டார் மம்முட்டியுடன் இவர் இணைந்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நேர்காணலில் நடிகை ஜோதிகா கூறியதாவது,
நான் தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் 17 வயதில் பெரிய, பிரபலமான ஹீரோக்களின் படங்களில் நடிக்கவே அதிக முக்கியத்துவம் கொடுத்தேன். அதற்கு காரணம், அந்த படங்களில் நடித்தால் தான் விரைவில் நானும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக முடியும், சம்பளமும் அதிகமாக கிடைக்கும் என்று நினைத்து, அந்த நோக்கத்தில் பட வாய்ப்புகளை தேர்வு செய்தேன்.
ஆனால் ஒரு கட்டத்தில் நாம் நல்ல கதைகளில், நல்ல கேரக்டர்களில் நடித்தால்தான் ரசிகர்களின் மனதில் நீண்டகாலம் நிலைத்திருக்க முடியும் என்ற புரிதல் வந்தது. அதற்கு பிறகு முக்கியத்துவம் உள்ள நல்ல கேரக்டர்களை, கதைகளை தேர்வு செய்து நடிக்க ஆரம்பித்தேன். தி காதல் கோர் படத்தில் அப்படிப்பட்ட ஒரு நல்ல கேரக்டரில் நான் நடித்திருக்கிறேன், என கூறியிருக்கிறார் நடிகை ஜோதிகா.





