கமல்ஹாசனுக்கு மிகப்பெரிய இடைவெளிக்குப் பிறகு கிடைத்த வெற்றி தான் விக்ரம். 2022 ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், கமலின் திரையுலக வாழ்க்கையில் மிக முக்கியமான படம் என்றே கூறலாம். ராஜ்கமல் பிலிம்ஸ் சார்பில் அவரே இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தார். லோகேஷ் கனகராஜ் இயக்கிய இந்த திரைப்படம் வசூல்மேல் வசூல் குவித்து சாதனை படைத்தது.
இதனால் மகிழ்ச்சியில் உறைந்து போன கமல்ஹாசன், படத்தின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோருக்கு பரிசுகளை வழங்கினார். தொடர்ந்து பட தயாரிப்பிலும் அவர் ஈடுபட்டார். இப்படியாக அவர் எடுத்தது தான், அமரன் திரைப்படம்.
சிவகார்த்திகேயன் நடிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கிய இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கையை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டது. அதனை மிக நேர்த்தியாக எடுத்து சபாஷ் போட வைத்தார் ராஜ்குமார் பெரியசாமி.
படத்தின் ஆகச்சிறந்த பலமே இந்து ரபேகா வர்கீஸ் கதாபாத்திரத்தில் நடித்த சாய் பல்லவி தான். தனக்கு கொடுக்கப்பட்ட ரோலை மிக அற்புதமாக செய்து பலரையும் கவனிக்க வைத்தார். பொதுவாக தீபாவளி போன்ற பண்டிகைக்கு ரிலீஸ் ஆகும் திரைப்படங்கள், சோகமான கிளைமாக்ஸை வைத்திருந்தால் அது தமிழ் சினிமாவில் ஓடாது என்கின்ற ஒரு பேச்சு உண்டு.
அதனை அடித்து உடைத்தது அமரன் திரைப்படம். திரையிட்ட இடங்களில் எல்லாம் ரசிகர்கள் கூட்டம் கூட்டமாக படையெடுக்க, கிட்டத்தட்ட 300 கோடி ரூபாய்க்கு மேல் அமரன் திரைப்படம் வசூல் ஈட்டியது. அது மட்டுமல்லாமல் இந்த ஒரு திரைப்படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோ என்ற அந்தஸ்திற்கும் சென்றார் சிவகார்த்திகேயன்.
இந்த திரைப்படத்தின் நூறாவது வெற்றி விழா நேற்று நடைபெற அதில் கமலஹாசன் சிவகார்த்திகேயன் ராஜ்குமார் பெரியசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது மேடையில் கமல்ஹாசன் உடன் பேசிய சிவகார்த்திகேயன், நீங்கள் எங்களை உலக நாயகன் என்று அழைக்க வேண்டாம் என்று கூறினீர்கள். ஆனால் தக் லைப் திரைப்படத்தின் அழகான டீசரில், மணிரத்னம் சார் உங்களுக்கு விண்வெளி நாயகன் என்று பட்டம் கொடுத்துள்ளார். அது உங்களுக்கு மிகவும் பொருத்தமாக இருக்கிறது என்று தெரிவித்தார்.





