கமல்ஹாசனின் 234 வது திரைப்படமாக எடுக்கப்பட்டிருக்கிறது தக் லைப் திரைப்படம். இதன் அறிவிப்பு வெளியாகும் போது அதன் மீது ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இதற்கு மிக முக்கிய காரணம் அதன் இயக்குனர் மணிரத்னம் என்பதுதான்.
இதற்கு முன்பு கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி இணைந்தது 1987 ஆம் ஆண்டில். இருவரும் இணைந்து கொடுத்த நாயகன் என்னும் கிளாசிக் ஹிட் திரைப்படத்தை, தமிழ் சினிமா என்றும் மறக்காது. நடிப்புக்கு கமல்ஹாசன், இயக்கத்திற்கு மணிரத்னம், இசைக்கு இளையராஜா என மூன்று ஜாம்பவான்களும் இணைந்து கொடுத்த அந்த திரைப்படம் இப்போது வரை பலராலும் கொண்டாடப்பட்டு வருகிறது.
இதில் வேலு நாயக்கர் ஆகவே வாழ்ந்து அசத்தி இருப்பார் கமல்ஹாசன். துணிச்சலான இளைஞர், இரு குழந்தைகளுக்குத் தந்தை, முதிர்ச்சியான தாத்தா என ஒவ்வொரு காலத்திற்கு ஏற்ப அவர் நடித்திருந்த விதம் ரசிகர்களை கவர்ந்தது.
இப்படி பலராலும் பாராட்டப் பெற்ற நடிப்பின் மூலம் தேசிய விருதையும் பெற்றார் கமல்ஹாசன். இந்த சூழலில் தான், மீண்டும் கமல்ஹாசன் மணிரத்னம் கூட்டணி இணைந்து இருக்கிறது. இதற்கான அறிவிப்பு வீடியோ இணையத்தில் வைரலானது. அதில் தன்னை ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று கமல்ஹாசன் அறிமுகப்படுத்திக் கொள்வார்.
திருநெல்வேலி பாஷையில் அவர் பேசிய காட்சிகள், வரவேற்பை பெற்றன. இதனைப் பார்க்கும்போதே தக் லைப் திரைப்படம் கேங்ஸ்டர் படம் என்று பலரும் கூறி வந்தார்கள். ஏற்கனவே நாயகன் திரைப்படத்தில் அவர் வேலு நாயக்கர் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த சூழலில், இதில் ரங்கராய சக்திவேல் நாயக்கர் என்று அவர் கூறியது இரு படத்திற்கும் இடையே ஏதும் தொடர்பு இருக்குமோ என்ற சந்தேகத்தை எழுப்பியுள்ளது.
கமல்ஹாசன் போக, சிலம்பரசன், திரிஷா, அசோக் செல்வன், அபிராமி, நாசர் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த திரைப்படத்தில் நடித்திருக்கிறது. கிட்டத்தட்ட ஐந்தே மாதங்களில் இதற்கான சூட்டிங் பணிகளை முடித்திருக்கிறார் மணிரத்னம். போஸ்ட் ப்ரோடுக்ஷன் பணிகள் தற்போது நடைபெற்று வரும் சூழலில், படத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் பத்தாம் தேதி வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள். தமிழ்ப்புத்தாண்டு, வார விடுமுறை எனத் தொடர்ந்து ஐந்து நாட்கள் கிடைப்பதால் இந்த முடிவை படக்குழு எடுத்திருக்கிறது.





