இதுவரை 26 திரைப்படங்களில் நடித்திருக்கும் கார்த்தி, ஒவ்வொரு படத்திற்கும் ஒவ்வொரு இயக்குனருடன் இணைந்து பணியாற்றி இருக்கிறார். முத்தையாவிடம் மட்டும்தான் கொம்பன் மற்றும் விரும்பன் என இரண்டு திரைப்படங்களை கார்த்திக் கொடுத்திருக்கிறார். மற்றபடி அவர் இணைந்து பணியாற்றிய அத்தனை இயக்குனர்களும் முதல் முறையாக கூட்டணி அமைத்த நபர்களே.
குறுகிய காலத்திலேயே கார்த்தி மிகப்பெரிய இடத்தை பிடித்ததற்கு அவரது தொடர் வெற்றி படங்கள் தான் காரணம். பருத்திவீரன் திரைப்படத்தில் தொடங்கி ஆயிரத்தில் ஒருவன் பையா நான் மகான் அல்ல என இந்த பட்டியலை சொல்லிக் கொண்டே இருக்கலாம்.
இதில் அவரது கேரியரில் மிக முக்கிய திரைப்படமாக அமைந்தது கைதி. லோகேஷ் கனகராஜின் இரண்டாவது திரைப்படமாக எடுக்கப்பட்டிருந்த கைதி திரைப்படம் பட்டித் தொட்டி எங்கும் ஹிட் அடித்தது. சொல்லப் போனால் தமிழ் சினிமா இதுவரை பார்க்காத களத்தை, மிக விறுவிறுப்பாக அந்தக் களம் காட்டியிருந்தது.
ஒரே ஒரு நாள் இரவு. அதில் கைப்பற்றப்பட்ட போதை பொருளை பாதுகாக்க போராடும் காவல்துறை ஒரு பக்கம், எப்படியாவது அந்த போதைப் பொருளை அடைய துடிக்கும் வில்லன் கும்பல் மறுபக்கம், காவல் துறைக்கு உதவும் நிலைக்குத் தள்ளப்படும் ஹீரோ கார்த்தி, காவல் நிலையத்தில் காக்க வைக்கப்பட்டிருக்கும் இளைஞர்கள் என அனைத்து விஷயங்களும் அதில் நிறைந்து இருக்கும்.
இதனால் கைதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ், விக்ரம் என்னும் திரைப்படத்தை இயக்கி அதில் எல் சி யு கான்செப்ட்டை வைத்து அசத்தினார். இதில் கைதி படத்தின் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. தற்போது கூலி படத்தை இயக்கி வரும் அவர் அடுத்ததாக கைதி படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்க உள்ளார்.
இந்த நிலையில் கங்குவா இசை வெளியீட்டு விழாவில் பங்கேற்ற கார்த்தி, அடுத்த ஆண்டு கைதி திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திற்கான சூட்டிங் தொடங்கும் என்று கூறினார். அப்போது வில்லன் ரோலக்ஸ் உடன் மோத வேண்டும் இல்லையா என்று மேடைக்கு கீழே இருந்த தனது அண்ணன் சூர்யாவை பார்த்து தெரிவித்தார். இதன்மூலம் கைதி படத்தின் இரண்டாம் பாகத்தில் ரோலக்ஸாக சூர்யா நடிக்க இருப்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த வீடியோவை ரசிகர்கள் அதிக அளவில் பகிர்ந்து வருகின்றனர்.





