பாலிவுட் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக இருப்பவர் அமீர்கான். சமீபத்தில் வெளியான கூலி படத்தில் ரஜினியுடன் கேமியோ ரோலில் அவர் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது 61 வயதான நடிகர் அமீர்கான் சமீபத்தில் கௌரி என்பவரை மூன்றாவது திருமணம் செய்து கொண்டார்.
இதுகுறித்து மகாராஷ்டிராவைச் சேர்ந்த பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே கடுமையாக விமர்சித்திருந்தார். அமீர்கான் காதல் ஜிகாத்தில் ஈடுபடுவதாகவும் காதல் ஜிகாத்தின் தூதர் என்றும் கிண்டலாக அவர் பேசியிருந்தார். இதுகுறித்து சர்ச்சை எழுந்த நிலையில் நடிகர் அமீர்கான் அதற்கு இப்போது பதில் தந்துள்ளார்.
இதுகுறித்து நடிகர் அமீர்கான் கூறியிருப்பதாவது, எனது குடும்பம் எப்போதும் மதங்களுக்கு இடையேயான உறவுகளை ஏற்றுக் கொள்கிறது. எனது திருமணங்கள் எதுவும் மதமாற்றத்தில் ஈடுபடவில்லை. என் குடும்ப உறுப்பினர்கள் இந்துக்கள் மற்றும் கிறிஸ்தவர்களை திருமணம் செய்து கொண்டுள்ளனர். இந்த திருமணத்தில் எந்த மதமாற்றமும் இருந்ததில்லை.
உண்மை என்னவென்றால் எங்களுடைய குடும்பம் மிகவும் வித்தியாசமானது. எனது சகோதரிகள் இருவரும் இந்துக்களை திருமணம் செய்தவர்கள். எனது மகளும் இந்துவை மணந்துள்ளார். எனது உறவினர் மன்சூர் ஒரு கிறிஸ்தவரை மணந்துள்ளார். நான் சிவில் திருமணம் செய்து கொண்டதால் கௌரி, கிரண் அல்லது ரீனா மூவரும் தங்கள் மதத்தை மாற்றவில்லை. கௌரி இந்து இல்லை. அவர் பிறப்பால் கிறிஸ்தவர்.
ஆனால் கிறிஸ்தவ மதத்தை அவர் பின்பற்றுவதும் இல்லை என்று அந்த பதிவில் கூறியிருக்கிறார். அமீர்கான் முதலில் ரீனா தத்தாவை கடந்த 1986ம் ஆண்டில் திருமணம் செய்தார். ஆனால் 2002ம் ஆண்டில் அவரை விவாகரத்து செய்துவிட்டார். பின்னர் 2005ம் ஆண்டில் திரைப்பட தயாரிப்பாளர் கிரண் ராவை திருமணம் செய்தார். பிறகு 2021ம் ஆண்டில் இருவரும் பிரிந்து விவகாரத்து செய்தனர்.
கடந்த ஆண்டு கௌரியை தனது வாழ்க்கை துணை என அமீர்கான் அறிவித்தார். இருவரும் பல ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த நிலையில் தற்போது கெளரியை திருமணமும் செய்து கொண்டார். ஆனால் மூன்று பேருமே இஸ்லாம் மதத்திற்கு மாறி அவர்கள் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அதேசமயம் விவாகரத்து செய்து கொண்ட இரு பெண்களும் அமீர்கான் உடன் ஒரே கட்டிடத்தில் வேறு வேறு வீட்டில் வசித்து வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.





