சமீபத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் லியோ. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளிவந்த, இந்த படம் முதல் நாளிலேயே ரூ. 148 கோடி வசூலை தாண்டியது. இதுவரை ரூ. 400 கோடிக்கு மேல் வசூலை அள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இன்றோ அல்லது நாளையோ படத்தின் ஒரு வார கலெக்சன் என்னவென்று, படத்தை தயாரித்த தயாரிப்பு நிறுவனமே அதிகாரபூர்வமாக அறிவிக்க உள்ளது.
இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் என்ற படத்தில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இதில், தமிழ் சினிமாவுக்கான மசாலா அயிட்டங்களை சேர்த்து, லோகேஷ் கனகராஜ் தந்திருக்கிறார். இடைவேளைக்கு பிறகுதான், அவரது படக்குழுவின் சொந்த சரக்கு, படமாக்கப்பட்டு இருக்கிறது. அதுதான், படத்தை வேற லெவலில் கழுவி கழுவி ஊற்ற காரணமாகி விட்டது.
சினிமாவுக்கான எந்தவித அடிப்படை அறிவும், சாதுரியமும் இல்லாத திரைக்கதை என்பதை, படத்தின் இரண்டாம்பகுதி மிக அழகாக தெளிவுபடுத்துகிறது. நான் லியோ இல்லை என மறுத்து பொய்யாக நடிக்கும் ஹீரோ, அவனையே மிக அசிங்கமாக திட்டிக்கொள்ளும் அதிசயம் எல்லாம், இந்த படத்தில் நடந்திருக்கிறது.
மனைவி, பிள்ளைகளுக்காக வாழும் ஒரு குடும்பத் தலைவன், அவர்களையே ஏமாற்றிவிட்டு, போலியாக வாழ்கிறான். ஆனால், அவன் செய்கிற அத்தனை போலித்தனங்களும் அந்த குடும்பத்தின் மீதான அன்பின் வெளிப்பாடு என்கிற இந்த லாஜிக்கை, எந்த முட்டாளும் ஏற்றுக்கொள்ள மாட்டான் என்பதை படக்குழுவினர் யோசிக்கவே இல்லை என்பதுதான் சினிமா விமர்சகர்களின் கருத்தாக உள்ளது.
இந்த படத்தை பார்த்துவிட்டும், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிக்க சம்மதிக்கிறார் என்றால், எப்படிப்பட்ட படமாக இருந்தாலும், இந்த ரசிகர்கள் கோடிக்கணக்கில் பணத்தை கொட்டி, படம் பார்க்க வருவார்கள் என்ற அபார நம்பிக்கை காரணமாகவே இருக்கலாம். அல்லது ஹிஸ்டரி ஆப் வயலன்ஸ் போல, வேறொரு நல்ல ஆங்கில படத்தின் கதை லோகேஷ் கனகராஜ் கைவசம் இருக்கலாம்.
இதற்கிடையே, லியோ படத்தின் தயாரிப்பாளர், நான் ரெடிதான் வரவா என்ற பாடல் காட்சி படமாக்கப்பட்ட இரும்பு ஷெட்டை விற்க, விலை பேசி இருக்கிறார். அங்கு முதலில் வந்த வியாபாரி ரூ. 2 லட்சம் தருவதாக கூறி இருக்கிறார். அவரை போகச் சொல்லிவிட்டு வேறொரு காயலான் கடைக்காரரை வரச்சொல்லி விலை பேசி, அதே இரும்பு தளவாட பொருட்கள், மரச்சாமான்களை ரூ. 7.5 லட்சத்துக்கு விற்று இருக்கிறார். அதனால்தான், லலித்குமாரை தனது பினாமி தயாரிப்பாளராக விஜய் வைத்திருக்கிறார் என்கின்றனர், விவரம் தெரிந்தவர்கள். இதுல எல்லாம் கவனமாக இருங்க. படம் எடுக்கும் போது கதையில் மட்டும் கோட்டை விட்ருங்க என நாகேஷ் பாணியில் கிண்டலடிக்கின்றனர் நெட்டிசன்கள்.





