தெலுங்கு சினிமாவில் பல படங்களில் முன்னணி நட்சத்திரங்களுடன் நடித்தவர் அனுஷ்கா. அருந்ததி படம் தெலுங்கில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. தமிழிலும் அது டப்பிங் ஆகி வெளியாகி ரசிகர்களிடம் பலத்த வரவேற்பை பெற்றது. ஏற்கனவே சுந்தர் சி இயக்கத்தில் ரெண்டு படத்தில் நடிகர் மாதவனுடன் அனுஷ்கா நடித்திருந்தார்.
ஆனால் அந்த படத்தில் பிளாஷ்பேக் காட்சியில் சில காட்சிகளில் மட்டுமே அவர் நடித்திருந்ததால் தமிழ் சினிமா ரசிகர்களிடம் போதிய கவனத்தை அனுஷ்கா பெறவில்லை. அருந்ததி படத்தில் அவரது வசீகரமான அழகை பார்த்து வியந்து போன ரசிகர்களால் அந்த படம் தமிழிலும் பெரிய வசூலை அடைந்தது. தொடர்ந்து தமிழில் பட வாய்ப்புகள் அனுஷ்காவுக்கு குவிந்தன.
லிங்கா வேட்டைக்காரன் சிங்கம் அலெக்ஸ் பாண்டியன் இரண்டாம் உலகம் என்னை அறிந்தால் என பல படங்களில் முன்னணி நட்சத்திர ஹீரோக்களுக்கு ஜோடியாக அனுஷ்கா நடித்தார். இதற்கிடையே ராஜமௌலி இயக்கத்தில் பிரபாஸ் மனைவியாக பாகுபலி படத்தில் தேவசேனை கேரக்டரில் அனுஷ்கா ஒரு கம்பீரமான நடிப்பை தந்து ரசிகர்களை அசத்தினார்.
ஆனால் இஞ்சி இடுப்பழகி படத்தில் உடல் பருமன் கேரக்டரில் நடிப்பதற்காக அனுஷ்கா தனது உடல் எடையை அதிகரித்தார். ஆனால் அதற்கு பின்பு அவரது உடல் எடை குறையவே இல்லை. உடற்பயிற்சி டயட் யோகா ஆயுர்வேத சிகிச்சை என பலமுயற்சிகளை செய்தும் அவர் 40 வயது பெண்மணி போல காணப்பட்டதால் தொடர்ந்து நாயகி வாய்ப்புகளை இழந்துவிட்டார்.
இதையடுத்து பல ஆண்டுகள் சினிமாவில் நடிக்காமல் இருந்த அனுஷ்கா மிஸ் ஷெட்டி மிஸ்டர் பொலிஷெட்டி என்ற படத்தில் நடித்தார். 2 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குனர் கிரீஷ் இயக்கத்தில் காதி என்ற படத்தில் ஆக்சன் ஹீரோயினாக நடித்திருந்தார். விக்ரம் பிரபு அனுஷ்காவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். அந்த படம் கடந்த 5ம் தேதி வெளியானது.
மொத்தம் 50 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவான இந்த படம் 7.5 கோடி ரூபாய் மட்டுமே வசூலித்து படுதோல்வியை சந்தித்து இருந்தது. இதையடுத்து நடிகை அனுஷ்கா வெளியிட்ட ஒரு பதிவில் கூறியிருப்பதாவது, நீல ஒளியை சிவப்பு ஒளிக்கு மாற்றுகிறேன். சமூக ஊடகங்களில் இருந்து சற்று காலம் விலகி இருக்கப் போகிறேன். இந்த உலகில் மீண்டும் இணைந்து தொடர்ந்து பயணிக்க நான் முதலில் தொடங்கிய இடத்திற்கு செல்ல எல்லோரையும் விரைவில் கூடுதல் கதைகள் மற்றும் அன்புடன் சந்திக்கிறேன் என்று அனுஷ்கா அதில் குறிப்பிட்டுள்ளார்.





