தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நட்சத்திர நடிகையாக வலம் வருபவர் நயன்தாரா. அதிக சம்பளம் வாங்கும் தமிழ் நடிகைகளின் முதல் இடத்தில் இருந்து வருகிறார். திருமணத்துக்கு பிறகும் தனது முன்னணி நட்சத்திர இடத்தை நிலையாகவும் நடிகை நயன்தாரா தக்க வைத்துக் கொண்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் மற்றும் தெலுங்கில் நயன்தாரா கமிட் ஆகும் படங்களின் எண்ணிக்கை சற்று குறைந்து இருந்தாலும் தென்னிந்திய கதாநாயகிகளில் ஒரு படத்துக்கு 12 கோடி ரூபாய் என அதிக சம்பளம் வாங்குபவர் நயன்தாரா மட்டும்தான். தமிழில் தெலுங்கில் அவருக்கு அடுத்த நிலையில் திரிஷா சமந்தா போன்றவர்கள் இருக்கின்றனர்.
இந்த ஆண்டின் துவக்கத்தில் மெகா ஸ்டார் நடிகர் சிரஞ்சீவிக்கு ஜோடியாக மன சங்கர வரப்பிரசாத் காரு என்ற படத்தில் கதாநாயகியாக நடித்து நயன்தாரா மிகப் பெரிய வெற்றியை பதிவு செய்தார். தற்போது 40 வயதுகளில் அடியெடுத்து வைத்துள்ள நயன்தாரா ஒரு புதிய வியூகத்தை பின்பற்றுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள படங்களை அதிகமாக தேர்வு செய்யாமல் முன்னணி ஹீரோ நடிகர்களுடன் இணைந்து நடிக்கும் பான் இந்தியா படங்களுக்கு நயன்தாரா முன்னுரிமை கொடுத்து வருகிறார். அதே நேரத்தில் சண்டை காட்சிகள் மற்றும் நடிப்பு திறனை வெளிப்படுத்த வாய்ப்புள்ள கதாபாத்திரங்களையும் அவர் தேர்வு செய்கிறார்.
கேஜிஎஃப் நாயகன் யஷ் உடன் அவர் நடித்த டாக்ஸிக் படம் அடுத்த மாதம் திரைக்கு வர உள்ளது. இந்த படத்தில் நயன்தாரா இதுவரை நடிக்காத ஒரு புதிய தோற்றத்தில் சண்டைக்காட்சிகளில் நடித்தும் சிகரெட் பிடிக்கும் காட்சிகளிலும் நடித்தும் ஒரு துணிச்சலான நாயகியாக இந்த படத்தில் நடித்திருக்கிறார். அவரது கதாபாத்திரம் இந்த படத்தில் முதன்மையான கேரக்டர் என்றும் கூறப்படுகிறது.
அடுத்து பாலிவுட்டில் வம்சி இயக்கத்தில் நடிகர் சல்மான்கானுக்கு ஜோடியாக ஒரு படத்தில் அவர் நடிக்கிறார். சல்மான்கானுக்கு மனைவியாக அவர் நடித்தாலும் இது ஒரு வழக்கமான குடும்பத்தின் கதாபாத்திரமாக இல்லாமல் நடிப்புக்கு அதிக வாய்ப்புள்ள ஒரு வலுவான கதாபாத்திரத்தில் அவர் நடிக்கிறார். அந்த வகையில் இன்று 2 படங்களும் நயன்தாரா வழக்கமான கதாநாயகி என்ற கட்டமைப்பிற்குள் நிற்காமல் பிரம்மாண்ட தயாரிப்புகளில் தனது திரை பயணத்தை அவர் வலுவாக தொடர்வதை வெளிப்படுத்துகின்றன.





