நடிகர் சூர்யா நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் கங்குவா. சிறுத்தை சிவா இயக்கத்தில் வெளியான இந்த படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த 44வது படம்தான் ரெட்ரோ. இந்த படம் கடந்த 1ம் தேதி வெளியானது. இந்த படத்தில் நாயகியாக பூஜா ஹெக்டே நடித்திருந்தார்.
ரெட்ரோ படம் மிகப்பெரிய வெற்றியை வரவேற்பை பெறும் என்று எதிர்பார்த்த நிலையில் இந்த படத்துக்கு பெரிய ஆதரவு ரசிகர்களிடம் கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக நடிகர் சூர்யாவின் படங்கள் மாஸ் ஹிட் பெறாமல் ஏமாற்றத்தை தந்து வருவது சூர்யா ரசிகர்களை பலத்த ஏமாற்றத்தில் தள்ளியுள்ளது.
சூர்யா படங்கள் வௌியாகும் போது அவர் மீது காழ்ப்புணர்ச்சி கொண்ட சிலரால் இப்படி அவரது படத்துக்கு எதிராக விமர்சனங்கள் சமூக வலைதளங்களில் பரப்பப்படுகின்றன. அவரது படங்கள் குறித்து அவதூறான விமர்சனங்கள் எழுகின்ற என்று கூறப்பட்டாலும் நல்ல படங்களை ரசிக்கும் ரசிகர்களை கூட சூர்யாவின் சமீபத்திய படங்கள் திருப்திபடுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை.
இந்நிலையில் நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் நடிகர் சூர்யா நடித்து வரும் 45வது படம்தான் வேட்டை கருப்பு. இது அய்யனார் சுவாமி கதை என்று சொல்லப்படுகிறது. இந்த படம் நிச்சயமாக சூர்யாவுக்கு ஒரு திருப்புமுனை படமாக இருக்கும் என்று பெரிய எதிர்பார்ப்பு உள்ளது. இதில் சூர்யா வக்கீல் கேரக்டரில் நடித்து வருகிறார்.
மேலும் இந்த படத்தில் திரிஷா ஷிவதா லப்பர் பந்து நடிகை சுவாசிகா மன்சூர் அலிகான் ஆர்ஜே பாலாஜி யோகிபாபு நட்டி நடராஜன் உள்ளிட்டோரும் முக்கிய கேரக்டர்களில் நடித்து வருகின்றனர். படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கிய நிலையில், சூர்யா பிறந்த நாளில் படத்தின் டைட்டில் டீசரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.
இந்நிலையில் வேட்டை கருப்புபடத்தில் நடித்துள்ள லப்பர் பந்து நடிகை சுவாசிகா ஒரு நிகழ்ச்சியில் கூறியதாவது, இந்தப் படம் ஒரு பக்காவான மாஸ் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. இந்த படத்தில் சூர்யா திரிஷா ஆர்கே பாலாஜி மற்றும் நான் உட்பட அனைவரும் வக்கீலாக நடித்திருக்கிறோம் என்று நடிகை சுவாசிகா கூறியிருக்கிறார். ஆக இந்த படம் சட்டம் நீதி சம்பந்தப்பட்ட கதைக்களத்தில் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள் நிறைந்த ஒரு விறுவிறுப்பான படமாக இருக்கும் என்று சூர்யா ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.





