கடந்த ஆண்டு வெளியான திரைப்படங்களிலேயே அதிக கேலி கிண்டலுக்கு ஆளான திரைப்படம் இந்தியன் 2. இந்தத் திரைப்படத்தின் முதல் பாகத்தை ரசிகர்கள் இன்று வரை கொண்டாடி வருகிறார்கள். அதற்கு ஏற்றபடி அதன் திரைக்கதையும் வசனங்களும் இருக்கும். அது மட்டுமல்லாமல் இந்தியன் திரைப்படத்திற்கு மிக வெற்றியாக பார்க்கப்பட்டது ஏ ஆர் ரகுமான் இசை தான்.
இதுபோக சேனாதிபதி கதாபாத்திரத்தில் கமல் வெளுத்து வாங்கி இருப்பார். இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக அவர் தேசிய விருதையும் பெற்றார். லஞ்ச ஊழலுக்கு எதிராக பேசிய இந்த திரைப்படம் சங்கரின் திரையுலக பயணத்தில் ஒரு அக்மார்க் முத்திரை பெற்ற காவியம். இப்படி இந்தியன் திரைப்படத்தை நாம் புகழ்ந்து கொண்டே செல்லலாம்.
ஆனால் இது அனைத்திற்கும் ஒரு திருஷ்டியாக அமைந்துவிட்டது தான் இந்தியன் 2 திரைப்படம். கிட்டத்தட்ட இதன் சூட்டிங் பணிகளுக்காகவே ஐந்து ஆண்டுகள் செலவழித்தார் சங்கர். லைக்கா நிறுவனம் மிகப்பெரும் தொகையில் இந்த திரைப்படத்தை தயாரித்தது. கமலுடன் சேர்ந்து ஏராளமான நட்சத்திரங்கள் இந்த திரைப்படத்தில் நடித்தார்கள்.
இதற்கு ஏ ஆர் ரகுமான் இசையமைக்கவில்லை என்ற முதல் அறிவிப்பை அதன் மீது ஒரு அதிருப்தியை ஏற்படுத்தியது. பிறகு படத்திலிருந்து வெளியான டீசரும் டிரைலரும் அந்த அளவு வரவேற்பை பெறவில்லை. இப்படி அனைத்தும் எந்த ஒரு பரபரப்பும் இல்லாமல் வந்து கொண்டிருக்க படமும் வந்த இடம் தெரியாமல் போனது.
மிகப்பெரும் பொருட்செலவில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், குறைவான வசூலையே பெற்றது. இப்படியான சூழலில், இந்தியன் படத்தின் மூன்றாம் பாகத்தை ரிலீஸ் செய்வதற்கான பணியில் ஈடுபட்டு இருக்கிறார் சங்கர். படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும்போதே மூன்றாம் பாகத்திற்கான பணிகளையும் அவர் முடித்து விட்டார்.
இன்னும் பேட்ச் ஒர்க் பணிகள் மட்டும் இருப்பதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த திரைப்படத்திலிருந்து லைக்கா நிறுவனம் வெளியேறி விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரே ஒரு பாடலை மட்டும் பிரம்மாண்டமாக எடுக்க திட்டமிட்டு இருந்த சங்கர் தற்போது அதையும் கைவிட்டு விட்டார். இப்படியான சூழலில் தான் இந்தியன் 3 திரைப்படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் இறங்கி இருக்கிறது உதயநிதியின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம். இதனால் விரைவில் இந்தியன் 3 திரைப்படத்தை திரையரங்குகளில் காணலாம் என்று பலரும் கூறுகிறார்கள்.





