மாரி செல்வராஜ் – துருவ் விக்ரம் கூட்டணியில் புதிய திரைப்படம் உருவாவதாக, கர்ணன் திரைப்படத்தின் போதே அறிவிக்கப்பட்டது. அப்போது படத்தை பா ரஞ்சித் தயாரிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இந்த இடைவேளையில், உதயநிதி ஸ்டாலின் தனக்கு ஒரு படம் செய்யும்படி கேட்டுக் கொண்டதால், துருவ் படத்தை தள்ளி வைத்துவிட்டு மாமன்னன் படத்தை எடுக்கச் சென்றார் மாரி செல்வராஜ்.
மாமன்னன் திரைப்படம் ஒரு வழியாக வெளியாக, அதற்குப் பிறகு கிடைத்த சிறிய இடைவேளையில் இன்னொரு திரைப்படத்தையும் எடுக்கச் சென்றார் மாரி செல்வராஜ். இதற்கு வாழை என டைட்டில் வைக்கப்பட்டது. சிறுவர்களை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தை, டிஸ்னி ஹாட் ஸ்டார் நிறுவனம் தயாரித்துள்ளது.
முதலில் இந்த திரைப்படம் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்திலேயே நேரடியாக வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் அதன் முடிவு மாற்றப்பட்டு திரையரங்குகளில் வெளியாகும் என்று கூறப்பட்டது. ஆனால் தற்போது வரை, அதன் அடுத்த கட்ட அப்டேட் வெளியாகவில்லை.
இந்த சூழலில் தான் துருவ் படத்தின் மீது கவனம் செலுத்த ஆரம்பித்திருக்கிறார் மாரி செல்வராஜ். ஸ்ரீவைகுண்டத்தை அடுத்த மனத்தி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர் கணேசன் என்பவரை முன்னுதாரணமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்படுகிறது. இதற்காக கபடி விளையாட்டை களத்தில் இருந்து கற்றுத் தேர்ந்துள்ளார் துருவ் விக்ரம்.
இந்த திரைப்படத்திற்கு, பைசன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தலைப்பிற்கு கீழேயே காள மாடன் என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது. முதல்முறையாக தனது படத்திற்கு ஆங்கில படத்தின் டைட்டிலை மாரி செல்வராஜ் வைத்திருக்கிறார். இந்தப் படத்தை பா ரஞ்சித் தயாரிக்கிறார். இதன் தொடக்க விழாவில் பங்கேற்பதற்காக, சீயான் விக்ரம் நெல்லைக்கு சென்றார்.
தனியார் ஓட்டலில் தங்கி இருந்த அவரைக் காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். இதனைத் தொடர்ந்து அவர் படத்தின் தொடக்க விழா நடைபெறும் பகுதிக்குச் சென்றார். அங்கு கிளாப்ஸ் அடித்து பைசன் படத்தின் ஷூட்டிங்கை அவர் தொடங்கி வைத்தார். இந்தப் படத்தில், மலையாள நடிகைகள் அனுபமா பரமேஸ்வரன், ரசிஜா விஜயன், லால், பசுபதி, கலையரசன் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். தூத்துக்குடி சுற்றுவட்டார பகுதிகளில் இதன் படபிடிப்பு நடைபெறுகிறது.





