மிஷ்கின் இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் சைக்கோ. இளையராஜா இசையமைத்திருந்த இந்த திரைப்படத்தில், உதயநிதி ஸ்டாலின் கண் பார்வை அற்ற மாற்றுத்திறனாளியாக நடித்திருந்தார். நித்யா மேனனுக்கும் படத்தில் மிக முக்கியமான கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருந்தது. திரில்லர் ஜானரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றது.
இதனைத் தொடர்ந்து பிசாசு படத்தின் இரண்டாம் பாகத்தை இயக்கினார் மிஷ்கின். ஆண்ட்ரியா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இந்த திரைப்படத்தில், விஜய் சேதுபதி கேமியோ ரோலில் நடித்திருக்கிறார். ஏற்கனவே இந்த திரைப்படத்தின் முந்தைய பாகம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. அதில் ஹாரர் கலந்து ஒரு காதல் காவியத்தை கூறியிருந்தார் மிஷ்கின்.
ஒரு பேய் திரைப்படத்தில் இவ்வளவு அழகாக ஒரு காதல் கதையை கூற முடியுமா என்று பலரும் ஆச்சரியப்பட்டனர். இதன் காரணமாக பிசாசு படத்தின் இரண்டாம் பாகம் மீதும் ஒரு தனி எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால் பல்வேறு காரணங்களால் அந்த திரைப்படம் இன்னும் திரையரங்குகளுக்கு வராமல் இருக்கிறது.
இதுபோக, விஜய் சேதுபதியை வைத்து டிரெயின் திரைப்படத்தையும் அவர் இயக்கி இருந்தார். கலைப்புலி எஸ் தாணு இதனை தயாரித்து உள்ளார். இதன் சூட்டிங் முடிந்திருக்கும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி மட்டும் இன்னும் வெளியாகாமல் இருக்கிறது. ஏற்கனவே இந்த திரைப்படம் குறித்து பேசி இருந்த தாணு, படம் விறுவிறுப்பாக இருக்கும் என்றும், இருக்கையின் நுணுக்கி ரசிகர்களை வரவழைக்கும் என்றும் கூறியிருந்தார்.
இப்படியான சூழலில், ட்ரெயின் திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்திருக்கிறார் மிஷ்கின். அதில், இந்தத் திரைப்படம் 5 மணி நேர பயணத்தை குறிப்பதாக இருக்கும். ஏற்கனவே நான் தயாரிப்பாளர் தாணுவிடம் நந்தலாலா கதையை கூறிய போது, அவருக்கு பிடிக்காமல் போனது. அவர் கலையுடன் ஒரு திரைப்படத்தின் வியாபாரத்தையும் பார்க்கிறார். ட்ரெயின் திரைப்படத்தின் கதையை கூறும் போதும் அவர் இதைத்தான் என்னிடம் கேட்டுக் கொண்டார்.
இந்த முறை நான் அவரது தரப்பிலிருந்து யோசித்தேன். விஜய் சேதுபதியும் என்னிடம் நான் ஒரு வளர்ந்து வரும் நடிகர் அதற்கு ஏற்றது போல் படம் செய்யுங்கள் சார் என்று கூறியிருந்தார். இதனால் எப்போதும் என் பார்வையில் இருந்து படத்தை கூறுவதற்கு பதிலாக இந்த முறை இருதரப்பின் பார்வையில் இருந்தும் சேர்த்து கதையை கூறி இருக்கிறேன். வணிக ரீதியாகவும் இந்த திரைப்படம் வெற்றி வரும் என தெரிவித்துள்ளார்.





