இயக்குனர் நெல்சன் இயக்கிய “பீஸ்ட்” திரைப்படம் வெளிவந்தபோது அத்திரைப்படம் ரசிகர்களை அவ்வளவாக கவரவில்லை. வணிக ரீதியாக அத்திரைப்படம் நல்ல வசூலை பார்த்திருந்தாலும், ரசிகர்களை பொறுத்தவரையில் அது ஒரு சுமாரான திரைப்படமாகவே அமைந்திருந்தது.

குறிப்பாக நெல்சனை சமூக வலைத்தளங்களில் கேலி செய்யத் தொடங்கினார்கள். “பீஸ்ட்” திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருந்தபோதே ரஜினிகாந்த் படத்தை இயக்கும் வாய்ப்பு கிடைத்துவிட்டது.
ஆனால் “பீஸ்ட்” திரைப்படம் வெளிவந்து சுமாரான வரவேற்பை பெற்றதால் நெல்சன் ரஜினிகாந்தை வைத்து இயக்கும் திரைப்படம் டிராப் ஆகிவிடும் என்றே கூறப்பட்டது. எனினும் “ஜெயிலர்” என்ற டைட்டில் வைக்கப்பட்டு அத்திரைப்படத்தின் பணிகள் தொடங்கின.

கடந்த 10 ஆம் தேதி “ஜெயிலர்” திரைப்படம் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. நெல்சன் பந்தயம் அடித்துவிட்டார் என்று ரசிகர்கள் பலரும் பாராட்டி வந்தனர். இப்போது வரை உலகளவில் “ஜெயிலர்” திரைப்படம் ரூ.400 கோடி வசூலை நெருங்கி வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட இயக்குனர் நெல்சன், கமல்ஹாசனுடனான ஒரு சுவாரஸ்யமான சந்திப்பை குறித்து பகிர்ந்துகொண்டுள்ளார். அதாவது “பீஸ்ட்” திரைப்படம் வெளிவந்தபோது நெல்சன் கமல்ஹாசனை சந்தித்தாராம்.

விஜய் தொலைக்காட்சியில் நெல்சன் பணியாற்றிக்கொண்டிருந்தபோதே கமல்ஹாசனுடன் அறிமுகம் ஏற்பட்டிருந்ததாம். அதனால் சிறிது நேரம் இருவரும் பேசிக்கொண்டிருந்தார்களாம். அப்போது கமல்ஹாசன், “ஒரு நல்ல கதை இருந்தா சொல்லுங்க, சேர்ந்து பண்ணலாம்” என்று கூறினாராம். “நிச்சயமாக ஒரு நாள் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குவேன்” என்று அப்பேட்டியில் நெல்சன் கூறியுள்ளார்.





