மிக்ஜம் புயல் ஏற்படுத்திய கனமழை சென்னை மக்களின் வாழ்க்கையை கேள்விக்குறியாக மாற்றிவிட்டது. சென்னை மாநகரமே வெள்ளத்தில் மிதக்கிறது. தாழ்வான பகுதிகள், உயரமான பகுதிகள் என்ற பாகுபாடின்றி எல்லா இடங்களிலும் மழைநீர் வெள்ளம்போல தேங்கி நிற்கிறது. வெள்ளம் வடிவதற்கு பல பகுதிகளில் வாரக்கணக்கில், சில பகுதிகளில் மாதக்கணக்கில் ஆகும் நிலையில், மக்கள் தவிக்கின்றனர்.
இதற்கிடையே சினிமா உலகம் சார்ந்த பலரும், தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். தனது வங்கி கணக்கில் இருந்த 2.20 லட்சம் ரூபாயில், வாடகைக்கான ரூ. 20 ஆயிரத்தை மட்டும் வைத்துக்கொண்டு மீதி ரூ. 2 லட்சத்தை 200 குடும்பங்களுக்கு ரூ 1000 வீதம் தந்திருக்கிறார் விஜய் டிவியில் கலக்கப்போவது யாரு புகழ் பாலா.
பாக்யராஜ் மகன் சாந்தனு, மழைவெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் சிக்கியுள்ள பகுதி குறித்து, மீட்புக்குழுவினருக்கு தகவல், இடம் ஷேர் செய்து இப்படி பலரை பத்திரமாக மீட்க உதவி செய்திருக்கிறார். அஜீத், விஜய் ரசிகர்கள் பலரும் தங்கள் பகுதிகளுக்கு சென்று தேவையான உதவிகளை செய்து வருகின்றனர். மழையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சூர்யா, கார்த்தி ரூ. 10 லட்சம் முதல்கட்ட நிதியுதவி வழங்கியுள்ளனர்.
ஆனால் இந்த நேரத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் பலரும், நடிகர் மயில்சாமியை நினைத்து கண்ணீர் வடிக்கின்றனர். ஏனெனில், இதுபோன்ற இயற்கை பேரிடர் பாதிப்புகள் ஏற்பட்டால், ஏகப்பட்ட சாப்பாடு பொட்டல்களை தயார் செய்து, ட்ரை சைக்கிளில் வைத்துக்கொண்டு வீடு வீடாக சென்று, மக்களை நேரில் சந்தித்து உணவு பொட்டலங்களை வழங்குவது அவரது பாணி.
மயில்சாமியின் மிகப்பெரிய மனசு என்னவென்றால் இதுபோன்ற உதவிகளை செய்யும்போது அவர் எந்தவிதமான விளம்பரமும் தேடமாட்டார். கேமராவை கூட அவர் பார்த்து போஸ் கொடுத்து அந்த உதவிகளை செய்ய மாட்டார். அதுமட்டுமின்றி மருத்துவ சிகிச்சை, கல்விச் செலவு போன்றவற்றுக்கு கூட மயில்சாமியை அணுகினால், வசதியான நடிகர்களை அவர்களிடம் கேட்டு நிதி வாங்கி கொடுத்து உதவுவது மயில்சாமியின் பண்பாக இருந்துள்ளது.
ரஜினி, கமல், விஜய், அஜீத், தனுஷ், சியான் விக்ரம், விஜய் சேதுபதி என கோடி கோடியாக கொட்டிக்கொடுத்து ரசிகர்கள் அவர்களை வாழ வைக்கின்றனர். ஆனால் இதுபோன்ற நேரங்களில் அவர்கள் அள்ளி கொடுக்கலாம். அல்லது கிள்ளிக்கொடுக்கலாம். கேபிஒய் பாலா போன்றவர்களை பார்த்தாவது, மயில்சாமி போன்ற சிறிய நடிகர்களின் குணம் அறிந்தாவது பெரிய ஸ்டார் நடிகர்களும் களத்தில் இறங்கி உதவ, இனியாவது முன்வரலாம்.





