தமிழ் சினிமாவில் இப்போது கதைக்கு உள்ள பற்றாக்குறையை விட டைட்டிலுக்கு தான் பெரிய பற்றாக்குறை நீடிக்கிறது. படத்துக்கு டைட்டில் வைப்பதுதான் இயக்குனர்களுக்கு பெரிய தலைவலியாக மாறியிருக்கிறது. ஆனால் ரஜினி கமல் விஜய் படங்கள் என்றால், அவர்களது கேரக்டர் பெயரையே படத்துக்கு டைட்டிலாக வைத்து சுலபமாக தப்பித்து விடலாம்.
ஆனால் மற்ற நடிகர்களுக்கு டச்சிங் ஆன டைட்டில்களை வைப்பதில் இயக்குனர்களுக்கு பெரிய போராட்டமே ஏற்படுகிறது. அதனால்தான் நடிகர் சிவகார்த்திகேயன் படங்கள் மட்டுமின்றி பல இயக்குனர்கள் பழைய பட தலைப்புகளையே அப்படியே எடுத்து புதிய படங்களுக்கு டைட்டிலாக வைத்து வருகின்றனர்.
நடிகர் விஜய் நடித்த படம் ஒன்றுக்கு வைத்த டைட்டில் குறித்து நேர்காணல் ஒன்றில் இயக்குனர் பேரரசு கூறியதாவது, நடிகர் விஜய் நடித்த அந்த படத்துக்கு 100 150 டைட்டில் வரை நான் யோசிச்சேன். அந்த படத்தில் விஜய் கேரக்டர் பெயர் கிரி. அதனால் படத்துக்கு கிரிவலம் என பெயர் வைத்தேன். ஆனால் அந்த டைட்டிலை வேறு ஒரு இயக்குனர் ஏற்கனவே பதிவு செய்திருந்தார்.
ஆனால் அவரிடம் நான் அந்த டைட்டிலை கேட்டேன். ஆனால் அவரோ படத்தின் டைட்டில்தான் கதையே. அதை மாற்ற முடியாது என்று சொல்லிவிட்டார். பிறகு தாண்டவம் மிரட்டல் சிவகிரி என பல பெயர்களை படத்துக்கு வைக்க யோசித்தேன். இப்படியே 100 150 டைட்டில்களை யோசித்தும் ஒன்று கூட எனக்கு திருப்தியாக அமையவில்லை.
அப்போது டிவியில் பாரதிராஜா இயக்கத்தில் வெளியான தாஜ்மகால் படத்தில் இருந்து ஒரு பாடல் காட்சி ஓடியது. அதில் திருப்பாச்சி அருவாளை தீட்டிக்கிட்டு வாடா வாடா என்ற பாடலை கேட்டவுடன், திருப்பாச்சி தான் விஜய் படத்துக்கு பொருத்தமான டைட்டில் என உடனே முடிவு செய்தேன். அந்த பெயரை டிசைன் செய்து விஜயிடம் கொண்டு சென்று காட்டினேன்.
கிரிவலம் என்ற டைட்டிலை விட இந்த டைட்டில் விஜய்க்கு ரொம்ப பிடித்து போய் மகிழ்ச்சியாகி விட்டார். படத்தின் கதைபடி அருவாள் செய்கிறவர்தான் ஹீரோ. அதனால் திருப்பாச்சி பெயர் அதற்கேற்ப அமைந்து விட்டது. திருப்பாச்சி படம் வெளியாகி பெரிய வெற்றியை பெற்றது. ஆனால் கிரிவலம் மிரட்டல் தாண்டவம் என்ற பெயர்களிலும் படங்கள் வெளியாகின. ஆனால் திருப்பாச்சி அளவுக்கு பேசப்படவில்லை என்று பேரரசு கூறியிருக்கிறார்.





