தமிழ் சினிமாவில் திரில்லர் படங்களுக்கென்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. 1960களில் வெளியான அதே கண்கள் திரைப்படத்தில் தொடங்கி, ராட்சசன் திரைப்படம் வரை ஒவ்வொரு திரில்லர் படமும் ரசிகர்களுக்கு புதுவித அனுபவத்தை கொடுத்துள்ளது. அதிலும் குறிப்பாக ராட்சசன் திரைப்படத்தை இங்கு கொண்டாடாத ஆட்களே இல்லை என்று கூறலாம்.

இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில், விஷ்ணு விஷால் நடித்து வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ஒவ்வொரு காட்சியையும் ரசிகர்களை சீட்டின் நுனிக்கு உட்கார வைத்த இயக்குனர் ராம்குமார், இந்த படத்தின் மூலம் பரபரப்பாக பேசப்பட்டார். இப்போது வரை தமிழ் சினிமாவில் ஏதாவது ஒரு திரில்லர் படங்கள் வெளியானாலும், அதனை ராட்சசனுடன் ஒப்பிட்டுதான் பலரும் விமர்சிக்கின்றனர். அந்த அளவு இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ராட்சசன் படத்தைத் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வெளியான மிக முக்கியமான க்ரைம் த்ரில்லர் படம் என்றால் அது போர் தொழில் தான். திருச்சி மாநகரில் அடுத்தடுத்து பெண்கள் கொலை செய்யப்பட, அதனை அனுபவமிக்க ஒரு போலீஸ்காரரும், அவருக்கு உதவியாளராக இருக்கும் அனுபவம் இல்லாத ஒரு இளைஞரும் சேர்ந்து விசாரித்தால் எப்படி இருக்கும் என்பதை கதைக்கருவாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டது.

தனது குடும்பத்தில் தந்தையும் போலீசாக இருந்ததால், அவர்களின் ஆசைக்கு இணங்க காவலர் தேர்வில் தேர்ச்சி பெறும் அசோக், டிஎஸ்பி பயிற்சி பெறும் இளைஞர் கதாபாத்திரத்தில் மிகச் சரியாக நடித்திருந்தார். போர் தொழில் வெற்றிக்கு இன்னொரு காரணம் என்னவென்றால் அது சரத்குமார் நடிப்புதான். லோகநாதன் எனும் கதாபாத்திரத்தில் நடித்திருந்த அவர், தனது அனுபவம் மிக்க போலீஸ் வாழ்க்கையை அசோக்கிற்கு சொல்லும் இடத்தில் பலராலும் கவனிக்கப்பட்டார்.
கொலையாளியை படத்தின் இடைவேளையிலேயே கண்டுபிடிக்கப்பட்டது போல், போர் தொழில் காட்சியை அமைத்திருந்த இயக்குனர் விக்னேஷ் ராஜா, இரண்டாம் பாதியையும் பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் கதையை நகர்த்தி பாராட்டை பெற்றார். ஒரு பாடல் கூட இடம்பெறாமல், படத்தின் கதையை மட்டுமே நம்பி எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
வெறும் 15 கோடியில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், 50 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை அள்ளி பாக்ஸ் ஆபிஸ் வெற்றியை பெற்றது. அது மட்டும் இல்லாமல் நடிகர்கள் அசோக் மற்றும் சரத்குமாருக்கு மிக முக்கியமான திரைப்படமாக இது அமைந்தது. நடிகை நிகிலா விமலும் தன் பங்குக்கு சரியாக நடித்து படத்தின் வெற்றிக்கு உதவினார். இந்த திரைப்படம் எப்போது ஓடிடியில் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அதற்கான அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதாவது, சோனி லைவ் தளத்தில் ஆகஸ்ட் 4ஆம் தேதி படம் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





