இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கிய போடா போடி படம் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் நடிகை வரலட்சுமி சரத்குமார். சுப்ரீம் ஸ்டார் என அழைக்கப்படும் நடிகர் சரத்குமாரின் மகள். அதன்பிறகு பல படங்களில் அவர் நடித்து முக்கிய நடிகையாக ரசிகர்களின் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றார்.
சண்டக்கோழி 2 சர்கார் போன்ற படங்களில் வரலட்சுமி சரத்குமார் வில்லி கேரக்டரிலும் நடித்து ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார். கடந்த ஆண்டில் மும்பையை சேர்ந்த தொழிலதிபர் நிக்கோலா சச்தேவ் என்பவரை வரலட்சுமி திருமணம் செய்துக்கொண்டார். திருமணத்துக்கு பிறகும் அவர் படங்களில் நடித்து வருகிறார்.
இப்போது தனியார் டிவி சேனல் ஒன்றில் டான்ஸ் நிகழ்ச்சி ஒன்றில் நடிகை வரலட்சுமி சரத்குமார் நடுவராக பங்கேற்றுள்ளார். அதில் மற்றொரு நடுவராக நடிகை சினேகாவும் இருந்து வருகிறார். சினிமாவில் வாய்ப்புகள் வெகுவாக குறைந்த நடிகைகள் இதுபோன்ற ரியாலிடி ஷோக்களில் நடுவராக பங்கேற்பது சமீபகாலமாக அதிகரித்து வருகிறது.
அப்போது அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பெண் போட்டியாளர் ஒருவர், தன்னை பெற்றோர் சரியானபடி கவனித்துக்கொள்ளாமல் விட்டு விட்டனர். பெற்றோரின் அருகாமையும் அன்பும் இல்லாமல் நான் மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறேன் என்று கண்ணீர் விட்டு அழுதார். அப்போது நடுவர்களாக இருந்த நடிகை வரலட்சுமி சரத்குமார் சினேகா ஆகியோரும் கண்ணீர் சிந்தினர்.
அப்போது பேசிய நடிகை வரலட்சுமி சரத்குமார், சின்ன வயதில் அப்பா அம்மா இருவருமே வேலை பார்த்தார்கள். அப்போது அவர்கள் இருவரும் காலையில் வேலைக்கு போனால் மாலையில் தான் திரும்பி வருவார்கள். அப்படி அவர்கள் வேலைக்கு சென்றால், தெரிந்தவர்கள் வீடு பக்கத்து வீடுகளில் எங்களை பார்த்துக் கொள்ளுமாறு விட்டுச் செல்வார்கள்.
அப்படி அப்பா அம்மா வேலைக்கு சென்ற நேரங்களில், அவர்கள் பக்கத்தில் இல்லாத நேரங்களில் சிறுவயதில் என்னை 5, 6 பேர் பாலியல் துன்புறுத்தல் செய்திருக்கின்றனர். இது என் வாழ்க்கையில் நடந்திருக்கிறது. தயவு செய்து உங்கள் குழந்தைகளுக்கு குட் டச் பேட் டச் பற்றி கண்டிப்பாக சொல்லிக் கொடுங்கள் என்று நடிகை வரலட்சுமி சரத்குமார் அப்போது கூறினார்.





