நடிகர் சிம்பு என்கிற சிலம்பரசன் கடந்த 3ம் தேதி தனது 42வது பிறந்த நாளை கொண்டாடினர். அப்போது அவர் நடிக்க போகும் 3 படங்களின் அப்டேட் அதிரடியாக வெளியிடப்பட்டது. இது அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது. இது எஸ்டிஆர் ரசிகர்களுக்கு பிறந்த நாள் பரிசு அறிவிப்பாகவும் அமைந்தது.
பத்துதல படத்துக்கு பிறகு சிம்பு நடித்த படம் எதுவும் 2 ஆண்டுகளாக வெளியாகவில்லை. மணிரத்னம் இயக்கத்தில் கமல் திரிஷா நடித்துள்ள தக்லைப் படத்தில் சிம்பு வில்லன் கேரக்டரில் நடித்திருக்கிறார். இந்த படம் வருகிற ஜூன் 5ம் தேதி ரிலீஸாக உள்ளது. இந்த படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
சிம்பு நடிப்பில் 49வது படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க உள்ளார். அடுத்து சிம்புவின் 50வது படத்தை சிம்புவே தயாரிக்கிறார். இதற்கான அட்மன் சினி ஆர்ட்ஸ் என்ற தயாரிப்பு நிறுவனத்தை சிம்பு ஆரம்பித்துள்ளார். இந்த படத்தை தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்கிறார். அடுத்து சிம்பு நடிக்கும் 51வது படத்தை இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து இயக்க உள்ளார்.
இதற்கிடையே நடிகர் சிம்பு இப்போது தலையில் நீண்ட கூந்தலுடன் காணப்படுகிறார். பல மாதங்களாக அவர் கிராப் வெட்டிக் கொள்ளாமல் நீண்ட கூந்தலுடன் சிம்பு காணப்படுகிறார். தேசிங்கு பெரியசாமி டைரக்ட் செய்யும் படத்தில் நாயகனாக, வில்லனாக 2 கேரக்டர்களில் சிம்பு நடிக்க உள்ளார்.
இந்த படத்துக்கான பிரமோ ஷூட் இன்னும் ஒரு மாதத்தில் நடத்தப்பட உள்ளது. அதனால் அந்த ஷூட் முடித்த பிறகுதான் சிம்பு கிராப் வெட்டிக்கொள்ள திட்டமிட்டுள்ளார். அதனால் அதற்கு முன்பாக எந்த படத்தின் படப்பிடிப்பிலும் அவர் கலந்துக்கொள்ள முடியாது. வருகிற மார்ச் மாதம் முதல் வாரத்தில் சிம்பு 50 படத்தின் பிரமோ ஷூட் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அடுத்து பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் சிம்பு நடிக்கும் 49வது படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் 16ம் தேதி துவங்கப்பட உள்ளது. ஆனால் இன்னும் இந்த படத்தில் நடிக்க கதாநாயகி தேர்வு செய்யப்படவில்லை. சிம்புவுக்கு ஜோடியாக யாரை நடிக்க வைப்பது என்ற தேடுதல் வேட்டை வேகமாக நடந்து வருகிறது. திரிஷா பிஸியாக இருப்பதால், அவரது தேதி கிடைக்க வாய்ப்பில்லை. நயன்தாரா சிம்பு ஜோடி சேர வாய்ப்பில்லை. மலையாளம் தெலுங்கு இந்தி படவுலகில் இருந்து யாரேனும் களத்தில் இறங்க வாய்ப்புள்ளது.





