நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டில் வெளியான படம் அமரன். மிகப்பெரிய வரவேற்பை வெற்றியை பெற்ற இந்த படம் உலகளவில் ரூ. 325 கோடி வசூலித்தது. இந்த படத்தின் அபார வெற்றிக்கு பிறகு சிவகார்த்திகேயன் தனது சம்பளத்தை ரூ. 70 கோடியாக உயர்த்தி விட்டதாக கூறப்படுகிறது. அடுத்து மதராஸி, பராசக்தி ஆகிய படங்களில் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படம் சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். மேலும் இந்த படத்தை டான் பிக்சர்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் தயாரித்திருக்கிறார். இந்த படத்தில் அதர்வா ஸ்ரீலீலா உள்ளிட்டோர் முக்கிய கேரக்டரில் நடிக்கின்றனர். நடிகர் ரவிமோகன் இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
சமீபத்தில் டாஸ்மாக் ஊழல் விவகாரத்தில் அமலாக்கத்துறை தீவிர விசாரணை நடத்தி வருகிறது. இந்த ஊழல் விவகாரத்தில் டான் பிக்சர்ஸ் தயாரிப்பாளர் ஆகாஷ் பாஸ்கரன் மற்றும் அவரது நண்பர் ரித்தீஷ் ஆகியோருக்கு நெருங்கிய தொடர்பு இருப்பதாக அமலாக்கத்துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது. இதையடுத்து ஆகாஷ் பாஸ்கரன், ரத்தீஷ் இருவருமே தலைமறைவாகி விட்டனர்.
இந்த சூழலில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் பராசக்தி படத்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. மேலும் இப்போது நடிகர் சிவகார்த்திகேயன் இலங்கையில் நடந்து வரும் மதராஸி படப்பிடிப்பில் இருந்து வருகிறார். இன்னும் 15 நாட்களுக்கு இலங்கையில் தான் அவர் இருக்கப் போகிறார். ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் ஷூட்டிங் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.
இலங்கையில் கொழும்பு கப்பல் துறைமுகத்தில் மதராஸி படத்தின் கிளைமாக்ஸ் சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் நடத்தப்படும் இந்த சண்டை காட்சிகளில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வருகிறார். அவர் இந்த ஷூட்டிங் முடிந்து சென்னைக்கு திரும்பிய பிறகு, அவரிடம் அமலாக்கத்துறை விசாரணை மேற்கொள்ள வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் சிவகார்த்திகேயன் பராசக்தி படத்தில் நாயகனாக நடிக்க ரூ. 70 கோடி சம்பளம் பேசப்பட்டுள்ளது. ஆனால் அந்த 70 கோடி ரூபாயை தொகையாக தராமல் 70 கோடி ரூபாய் மதிப்பில் சிவகார்த்திகேயனுக்கு புதிய பங்களா வீடு கட்டித் தர டான் பிக்சர்ஸ் தயாரிப்பு நிறுவனத்துடன் சிவகார்த்திகேயன் ஒப்பந்தம் செய்திருக்கிறார். அந்த விவகாரத்தில்தான் இப்போது அமலாக்கத்துறை சிவகார்த்திகேயனிடம் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.





