தமிழ் சினிமாவில் பிரமாண்ட இயக்குனர் என பெயர் எடுத்தவர் இயக்குனர் ஷங்கர். கடந்த 30 ஆண்டுகளில் 15 படங்களை தந்திருக்கிறார். இதில் இந்தி படம் நாயக், தெலுங்கு படம் கேம் சேஞ்சர் ஆகிய படங்களும் அடங்கும். ரஜினி கமல் விஜய் பிரபுதேவா பிரசாந்த் ராம்சரண் அர்ஜூன் விக்ரம் சித்தார்த் உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் ஷங்கர் படங்களில் நடித்திருக்கின்றனர்.
கடந்தாண்டில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான இந்தியன் 2 படம் பெரிய தோல்வியை சந்தித்தது. அதன்பிறகு நடப்பாண்டில் ஜனவரி 10ம் தேதி ராம்சரண் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் வெளியான கேம் சேஞ்சர் படமும் மிக மோசமான தோல்வி படமாக அமைந்தது. இது பெரிய பின்னடைவை அவருக்கு ஏற்படுத்தி உள்ளது.
அடுத்து ஷங்கர் இயக்கத்தில் வெளிவர உள்ள இந்தியன் 3 படம் மாபெரும் வெற்றியை பெற்றால் மட்டுமே அடுத்து ஷங்கர் திட்டமிட்டுள்ள வேள்பாரி படத்தை 3 பாகங்களாக எடுக்க முடியும். 1000 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்த படத்தை தயாரிக்க தயாரிப்பாளர்களும் தாராளமாக முன்வருவர். இல்லை என்றால் வேள்பாரி படம் என்ற திட்டமே ஷங்கருக்கு நிறைவேறாமல் போய்விடும்.
இந்த சூழலில் ஆரம்பத்தில் இருந்தே இயக்குனர்கள் ஷங்கர், ஏஆர் முருகதாஸ் படங்களில் நடிப்பதே தனது லட்சியம் என்று நடிகர் சிவகார்த்திகேயன் கூறி வருகிறார். இப்போது மதராஸி படத்தில் ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில் அவர் நடித்துள்ளார். அதே போல் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. தோல்வி படங்களை தந்த ஷங்கர் படத்தில் நடிக்க அவர் முன்வருவாரா என்றும் சந்தேகம் எழுந்துள்ளது.
இதுகுறித்து நேர்காணல் ஒன்றில் பேசிய வலைப்பேச்சு ஜெ பிஸ்மி கூறியதாவது, ஷங்கர் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க வாய்ப்புள்ளது. ஆனால் அதற்காக ஷங்கருக்கு சிவகார்த்திகேயன் வாழ்க்கை கொடுப்பாரா என்ற தொனியில் அதை பார்க்க கூடாது. தொடர் தோல்வியால் ஷங்கர் சற்று கீழே இறங்கி இருக்கிறார். தொடர் வெற்றியால் சிவகார்த்திகேயன் கொஞ்சம் மேலே வந்திருக்கிறார் என்பதுதான் இதில் உண்மை.
அதனால் நிச்சயமாக ஷங்கர் சிவகார்த்திகேயன் காம்பினேசன் அமைய வாய்ப்பிருக்கிறது. அப்படி நடந்தால் ஷங்கர் என்ற மிகப்பெரிய பிரமாண்ட இயக்குனர் படத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பதாக எடுத்துக்கலாம். ஷங்கருக்கு சிவகார்த்திகேயன் வாழ்க்கை தந்ததாக நாம் எடுத்துக்க முடியாது என்று அந்த நேர்காணலில் வலைப்பேச்சு ஜெ பிஸ்மி பேசியிருக்கிறார்.





