சிவகார்த்திகேயனின் நடிப்பில் கடைசியாக மாவீரன் படம் வெளியானது. பிரின்ஸ் கொடுத்த பலத்த அடியை இந்தப் படத்தின் மூலம் மறக்க வேண்டும் என அவரும் அவரது ரசிகர்களும் எதிர்பார்த்திருந்தனர். அவர்கள் எதிர்பார்த்திருந்தபடியே படம் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்து சிவகார்த்திகேயனை மீண்டும் ஃபார்முக்கு கொண்டு வந்தது.
மடோன் அஸ்வின் இயக்கியிருந்த மாவீரன் வசூல் ரீதியாக மட்டுமின்றி விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்றது. குறிப்பாக சிவகார்த்திகேயனின் நடிப்பு பலராலும் பாராட்டப்பட்டது. சூப்பர் ஸ்டார் ரஜினிக்கூட சிவகார்த்திகேயனை தொலைபேசியில் அழைத்து உங்கள் நடிப்பு நன்றாக இருந்தது; வித்தியாச வித்தியாசமா கதையை பிடிக்கிறீங்களே என கூறியது குறிப்பிடத்தக்கது.
மாவீரன் படத்தில் சிவகார்த்திகேயன் நடித்துக்கொண்டிருந்தபோதே தனது 21ஆவது படத்தில் நடிக்க கமிட்டானார். அந்தப் படத்தை கமல் ஹாசன் தயாரிக்க ரங்கூன் படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்குகிறார். இந்தப் படம் சிவகார்த்திகேயனின் கரியரில் மிகச்சிறந்த பெயரை பெற்றுத்தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் தனது நெருக்கமானவர்களிடம் அவ்வாறே சொல்லிவருவதாகவும் கூறப்படுகிறது.
படத்தின் முதற்கட்ட ஷூட்டிங் காஷ்மீரில் தொடங்கியது. சில மாதங்களுக்கு முன்பு அங்கு சென்றது படக்குழு. ஆனால் சில பிரச்னைகள் காரணமாக பாதியிலேயே திரும்பி வந்துவிட்டது. சில சீன்களுக்கான ஷூட்டிங்கை சென்னையிலேயே முடித்தது. அதனையடுத்து முழு முன் ஏற்பாட்டுடன் மீண்டும் காஷ்மீருக்கு சென்றது படக்குழு. இந்த முறை எந்த சிக்கலும் இல்லாமல் சுமூகமாக ஷூட்டிங் நடந்தது.
கிட்டத்தட்ட 75 நாட்கள் அங்கு இந்தப் படத்தின் ஷூட்டிங் நடந்தது. தற்போது காஷ்மீர் ஷெட்யூல் முடிந்துவிட்டதாக ராஜ்குமார் பெரியசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார். அதுமட்டுமின்றி அந்த ட்வீட்டில் காஷ்மீர் காவல் துறைக்கும், மக்களுக்கும் நன்றி தெரிவித்திருக்கும் அவர் சிவகார்த்திகேயன், கமல் ஹாசனுக்கும் தனது நன்றியை கூறியுள்ளார்.
Until next time, Kashmir🙏Thank you for nurturing us! These 75 days of shoot have been surreal! The relentless efforts of the crew, cast and the extensive support of @adgpi @KashmirPolice #Ulaganayagan @ikamalhaasan sir our hero @Siva_Kartikeyan producers #Mahendran sir… pic.twitter.com/Qu2h1bplQN
— Rajkumar Periasamy (@Rajkumar_KP) August 31, 2023
இதற்கிடையே இந்தப் படம் ராணுவ வீரரின் கதையை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இது உண்மையில் வாழ்ந்த ராணுவ வீரரின் வாழ்க்கைதான் எனவும் சொல்லப்படுகிறது. இப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை சாய் பல்லவி நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் பெயர் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.





