சின்னத்திரையில் காமெடி செய்துக்கொண்டிருந்தவர் சிவகார்த்திகேயன். ஆனால் 13 ஆண்டுகளில் தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக மாறியிருக்கிறார். முதல் படத்துக்கு ரூ. 10 ஆயிரம் சம்பளம் வாங்கிய அவர், இப்போது தனது படத்துக்கு ரூ. 70 கோடி சம்பளம் வாங்கும் அளவுக்கு உச்சம் தொட்டிருக்கிறார். முயற்சி திறமை கடும் உழைப்பால் ஒரு நட்சத்திர நாயகனாக சிவகார்த்திகேயன் உயர்ந்த இடத்தை அடைந்திருக்கிறார்.
நடிகர் சிவகார்த்திகேயனை போலவே சின்னத்திரை நிகழ்ச்சிகள் மூலமாக மக்கள் மத்தியில் பிரபலமானவர் கேபிஒய் பாலா. காமெடி ஷோக்களில் கலந்துக்கொண்டு தனது காமெடி பஞ்ச் டயலாக்குகளால் ரசிகர்களை கவர்ந்தவர் பல படங்களில் காமெடி ரோல்களில் நடித்தார். தவிர அவரது உதவும் குணத்தாலும் மக்கள் மத்தியில் பெரிய வரவேற்பை அடையாளத்தை பெற்றார்.
இந்த சூழலில் நடிகர் கேபிஒய் பாலா, தமிழ் சினிமாவில் அறிமுக நாயகனாக மாறியிருக்கிறார். அவர் நாயகனாக நடித்த காந்தி கண்ணாடி படம் நேற்று ரிலீஸானது. இந்த படத்தை ஷெரீப் டைரக்சன் செய்திருக்கிறார். பாலாஜி சக்திவேல் அர்ச்சனா பிரதான கேரக்டர்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தில் நாயகியாக நமீதா கிருஷ்ணமூர்த்தி என்பவர் நடித்திருக்கிறார்.
நேற்று வெளியான காந்தி கண்ணாடி படத்துக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வந்துக்கொண்டிருக்கிறது. அதே போல் நேற்றுதான் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்த மதராஸி படமும் வெளியாகி உள்ளது. இந்த படத்தை ஏஆர் முருகதாஸ் டைரக்ட் செய்திருக்கிறார். இந்த படத்துக்கும் பாசிட்டிவ் விமர்சனங்கள்தான் வந்துக்கொண்டு இருக்கிறது. அதிரடி நாயகனாக ஆக்சன் களத்தில் சிவகார்த்திகேயன் ரசிகர்களை அசத்தியிருக்கிறார்.
மதராஸி படமும் காந்தி கண்ணாடி படமும் ஒரே நாளில் ரிலீஸாவது குறித்து ஏற்கனவே நடிகர் கேபிஒய் பாலாவிடம் கேள்வி கேட்கப்பட்டது. மேலும் சிவகார்த்திகேயனுக்கு நீங்க போட்டியா என்றும் அப்போது கேட்கப்பட்டது. சிவகார்த்திகேயன் உயரம் வேறு, நான் இருக்கிற இடம் வேறு. அவரையும் என்னையும் ஒப்பிடாதீர்கள். மதராஸி படம் பார்க்க வந்து டிக்கெட் கிடைக்காத 10 பேர் என் படத்துக்கு வந்தாலே போதும் என்றும் கூறியிருந்தார்.
ஆனால் காந்தி கண்ணாடி படத்தின் இயக்குனர் ஷெரீப் செய்தியாளர்களிடம் பேசுகையில், பல ஊர்களில் பல தியேட்டர்களில், காந்தி கண்ணாடி படத்தின் பேனர்களை வைக்க சிவகார்த்திகேயன் ரசிகர்கள் தடுக்கின்றனர். காந்தி கண்ணாடி பட போஸ்டர்களை கிழிக்கின்றனர் என்று புகார் கூறியிருந்தார். சிவகார்த்திகேயனின் அபார வளர்ச்சியை அவரது ரசிகர்களே கெடுத்து விடுவார்கள் போல இருக்கிறதே என்று பலரும் புலம்புகின்றனர்.





