சூரி நடிப்பில் தற்போது மாமன் திரைப்படம் வெளியாகி உள்ளது. குடும்ப உறவுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்டிருக்கும் இந்த திரைப்படத்தின் கதையை தன் கைப்பட எழுதி இருக்கிறார் சூரி. விலங்கு வெப்சீரிஸை எடுத்த பிரசாந்த் பாண்டியராஜன் இந்தப் படத்தை இயக்கியிருக்கிறார். ராஜ்கிரண் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்.
படத்தில் சூரியின் சகோதரியாக வருகிறார் சுவாசிகா. அதேபோல் ஐஸ்வர்யா லட்சுமிக்கும் சூரியின் மனைவி கதாபாத்திரம் கொடுக்கப்பட்டிருக்கிறது. படத்தின் முதல் பாதி நன்றாக இருப்பதாகவும், இரண்டாம் பாதி முழுக்க முழுக்க குடும்ப உறவுகளின் சிக்கல்களை பிரதிபலிப்பாகவும் பலர் கூறி வருகின்றனர்.
இருப்பினும் படத்தில் பாச காட்சிகள் அதிகமாக இருப்பதாகவும், அது ஒரு கட்டத்தில் சலிப்பை உண்டு பண்ணுவதாகவும் பலரது விமர்சனமாக இருக்கிறது. இருப்பினும் கடந்த வாரம் வெளியான திரைப்படங்களில் மாமன் திரைப்படமே ஓரளவு நல்ல விமர்சனத்தை பெற்றிருக்கிறது. இதனால் அந்த திரைப்படத்திற்கு ரசிகர்கள் குவிந்த வண்ணமே இருக்கின்றனர்.
இந்த திரைப்படத்தின் மூலம் நடிகராக மட்டுமல்லாமல் ஒரு கதாசிரியராகவும் அடுத்த களத்திற்கு சென்றிருக்கிறார் சூரி. அடுத்ததாக இவர், விக்ரம் சுகுமாரனுடன் இணைந்து ஒரு வெப் சீரிஸில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே மதயானை கூட்டம் எனும் தரமான திரைப்படத்தை விக்ரம் சுகுமாரன் கொடுத்திருந்தார்.
அதன் பிறகு அவர் சாந்தனுவை வைத்து ராவண கோட்டம் திரைப்படத்தை இயக்கியிருந்தார். பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தையே பெற்றது. இப்படியான சூழலில்தான் சூரி விக்ரம் சுகுமாரன் கூட்டணி கவனிக்கத்தக்க வகையில் அமைந்திருக்கிறது. இருப்பினும் அந்த சீரிஸின் அடுத்த கட்ட தகவல்கள் ஏதும் இன்னும் வெளியாகவில்லை.
இந்த சூழலில் பேட்டி ஒன்றில் பேசி இருக்கும் சூரி, அடுத்த திரைப்படம் குறித்த பல்வேறு தகவல்களை பகிர்ந்தார். அதில், லோகேஷ் கனகராஜ் எனக்கு இரண்டு மூன்று கதைகளை கூறினார். லோகேஷ் கனகராஜின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழேயே நான் மூன்று கதைகளை வைத்திருக்கிறேன். எதிர்காலத்தில் இதில் ஒரு திரைப்படத்தில் நான் நடிக்கலாம். நிச்சயமாக நான் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.





