தமிழ் சினிமாவில் இயக்குனராக இருந்து நடிகர்களாக மாறியவர்கள் ஏராளம். குறிப்பாக, இந்த பட்டியலில் சசிகுமார் மற்றும் எஸ் ஜே சூர்யாவை நாம் முன்னிலையில் எடுத்துக் கொள்ளலாம். யாரும் எதிர்பாராத வகையில் சுப்பிரமணியபுரம் என்னும் கல்ட் கிளாசிக் திரைப்படத்தை கொடுத்த சசிகுமார், அந்தப் படத்தில் இருந்தே தன்னை நடிகராக மாற்றிக் கொண்டார்.
இதேபோல் வாலி குஷி என இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்த எஸ் ஜே சூர்யாவும், நியூ திரைப்படம் மூலம் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வர ஆரம்பித்தார். தற்போது இயக்கத்தை விட்டு விட்டு முழு நேர நடிகராக அவர் திகழ்ந்து வருகிறார். இந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் தான் பிரதீப் ரங்கநாதன்.
கோமாளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அவர் இயக்குனராக அறிமுகமானார். 90ஸ் கிட்ஸ் களின் வாழ்க்கையை அப்படியே திரைக்கு கடத்தியதால் கோமாளி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. அது மட்டுமல்லாமல், பிரதீப் ரங்கநாதனுக்கும் அந்த திரைப்படம் மிகப்பெரிய ஒரு என்ட்ரியைக் கொடுத்தது.
இதன் பிறகு, அவர் இயக்கிய திரைப்படம் லவ் டுடே. மிகக்குறைந்த பட்ஜெட்டில், இன்றைய தலைமுறையினரின் காதலை வெளிச்சம் போட்டு காட்டிய இந்த திரைப்படம் 100 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்தது. படத்தின் ஒவ்வொரு வசனங்களையும் நறுக்கென்று எழுதிய பிரதீப் ரங்கநாதனை, கொண்டாடாதவர்களே இருக்க முடியாது. இன்றைய இளைஞர்கள் செல்போன் மோகத்தில் சிக்கி இருப்பதையும் பிரதீப் கச்சிதமாக காட்டியதால் கைத்தட்டல்களை பெற்றார்.
இதனைத் தொடர்ந்து இயக்கத்தில் இருந்து ஒரு யுடர்ன் அடித்த பிரதீப் ரங்கநாதன், நடிப்பு பக்கம் கவனம் செலுத்த ஆரம்பித்தார். அதன்படி விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அவர் எல்ஐசி படத்தில் நடித்து வருகிறார். காதலை மையமாகக் கொண்டு எடுக்கப்படும் இந்த திரைப்படத்தில் எஸ் ஜே சூர்யா உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்தப் படத்தின் நடுவே, டிராகன் படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் பிரதீப் ரங்கநாதன். ஓ மை கடவுளே படத்தை இயக்கிய அஸ்வந்த் மாரிமுத்து தான் இதன் இயக்குனர். கல்லூரி மாணவர் கதாபாத்திரத்தில் பிரதீப் நடிக்க அவருக்கு இந்த திரைப்படத்தின் இரண்டு கதாநாயகிகளாம். அதில் ஒருவர், மலையாள நடிகை அனுபமா பரமேஸ்வரன். இயக்குனர்கள் கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோரும் நடிக்கும் இந்த திரைப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.





