நடிகர் சூர்யா, தமிழ் சினிமாவில் நடிக்க வந்த புதிதில் நடிகர் சிவக்குமார் மகன் என்ற ஒரு அடையாளம் மட்டுமே அவரிடம் இருந்தது. நேருக்கு நேர் படத்தில் விஜய் உடன் சூர்யா நடித்தார். இந்த படத்தில் சூர்யாவுக்கு சிம்ரன் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்த படத்தை பார்த்த பலரும், சூர்யாவுக்கு நடிக்கவே தெரியவில்லை. அவருக்கு டான்ஸ் வராததால் சிம்ரனை ஓடவிட்டு, பின்னால் துரத்திக்கொண்டே ஓடுவதுதான் சூர்யாவின் வேலையாக இருந்ததாக பலரும் கிண்டலடித்தனர். முகபாவனைகள் காட்ட தெரியவில்லை, ஸ்கூல் பையன் மாதிரி தெரியறார் என்ற விமர்சனங்களில் சிக்கினார் சூர்யா.
மௌனம் பேசியதே படம் மூலம் நடிகர் சூர்யாவுக்கு, நடிகன் என்ற அந்தஸ்தை கொடுத்தவர் இயக்குநர் அமீர்.அவர்தான் நடிப்பது எப்படி என்பதை சூர்யாவுக்கு கற்றுக்கொடுத்தார். அதன்பின், காக்க காக்க படம் மூலம் அதிரடி ஹீரோ என்ற இடத்தை சூர்யாவுக்கு பெற்றுத் தந்தது, அந்த படத்தை இயக்கிய இயக்குநர் கவுதம் மேனன்.
காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்கள் சூர்யாவுக்கு மிகப்பெரிய பிரேக் படங்களாக இருந்தன. அதுவும் ரொமாண்டிக் காதல் காட்சிகளில் சூர்யாவின் நடிப்பு பலத்த வரவேற்பை பெற்றது. ஆக்சன், காதல் என இரண்டிலும் சூர்யாவுக்கு நல்ல நடிப்பை வெளிப்படுத்திய படங்களாக இவை அமைந்தன.
காக்க காக்க படத்தில் நடித்த போதுதான் ஜோதிகா, சூர்யாவுக்கு காதல் ஏற்பட்டது. தொடர்ந்து பல படங்களில் ஜோடியாக நடித்த அவர்கள் திருமணத்துக்கு தயாரான போது, அவர்களுக்கு பக்கபலமாக இருந்து உதவியது இயக்குநர் கவுதம் மேனன்தான் என்றும் கூறப்படுகிறது.
இப்படிபட்ட இயக்குநர் கவுதம் மேனனை, அவருக்கு படமே எடுக்க தெரியாது என ஒருமுறை அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டு இருக்கிறார் சூர்யா. தனக்கு நடிப்பு சொல்லிக்கொடுத்து, தன் நடிப்பு கேரியரையே மாற்றுப்பாதையில் பயணிக்க வைத்து சூர்யாவை ஜெயிக்க வைத்ததே கவுதம் மேனன்தான். அவரையே இப்படி சொல்லி விட்டாரே என ரசிகர்கள் பலரும் சூர்யா மீது வருத்தப்படுகின்றனர்.





