இப்போதெல்லாம் நல்ல கதைகள் கொண்ட படங்கள் தமிழ் சினிமாவில் வருவதே இல்லை. ஏதாவது ஆங்கில படமோ, இந்தி படமோ, மலையாள படமோ அல்லது பல ஆண்டுகளுக்கு முன்பு வந்த தமிழ் படமோ எதையோ ஒன்றை காப்பி அடித்து புதிய படமாக எடுத்து தந்து விடுகின்றனர்.
இன்னும் சில இயக்குநர்கள் ரஜினி, விஜய், அஜீத் போன்ற மாஸ் ஹீரோக்களை படம் முழுக்க பில்டப் செய்து காட்டி, காட்டியே படத்தை ஓட வைத்து விடுகின்றனர். ஜெயிலர் படத்தில் ரஜினியை தவிர யார் நடித்திருந்தாலும் படம் 10 நாட்கள் கூட ஓடியிருக்காது என்பதுதான் கசப்பான உண்மை. லியோ படமும் விஜய்க்கு பதிலாக வேறு யாரேனும் நடித்திருந்தாலும் இதே நிலை தான்.
இப்படி பழைய படங்களை காப்பியடித்து, பழைய படக்காட்சிகளை திருடி, பழைய படங்களில் இடம்பெற்ற வசனங்களை திருடி இப்படி மக்களை ஏமாற்றி, கோடி கோடியாக பணம் சம்பாதிக்கும் இயக்குநர்கள், நடிகர்கள்., தயாரிப்பாளர்களுக்கு மத்தியில் நல்ல கதை அம்சங்கள் கொண்ட படங்களை தர ஆசைப்படும் உண்மையான படைப்பாளியான இயக்குநர்களும் இருக்கவே செய்கின்றனர்.
ஆனால் கமர்ஷியல் படங்களை தயாரித்து, கோடி கோடியாக பணத்தை அள்ளி பழகிய தயாரிப்பாளர்கள், நடிகர்கள் இதுபோன்ற நல்ல இயக்குநர்களை கண்டுகொள்ள மாட்டார்கள். அதனால் எத்தனையோ நல்ல கதைகளை வைத்துள்ள புதுமுக இயக்குநர்கள் இன்னும் வாய்ப்பின்றி அலைந்துக்கொண்டு இருக்கின்றனர். டூபாக்கூர் கதைகளை படமாக்கி வரும் சில இயக்குநர்கள் புகழின் உச்சிக்கு செல்கின்றனர் என்பதுதான் கசப்பான உண்மை.
சில படங்களை ஏற்கனவே இயக்கிய ஒரு இயக்குநர், சமீபத்தில் சூப்பர் குட் பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஆர்பி சவுத்ரியை சந்தித்து கதை சொல்லி இருக்கிறார். கதையை கேட்ட அவர் இயக்குநரை மிக அருமையான கதை என பாராட்டி அவருக்கு அட்வான்ஸ் தந்திருக்கிறார். அதாவது கதாநாயகியை மையப்படுத்திய கதை இது. 4 வயது சிறுவனின் தாயான ஒரு பெண் வாழ்க்கையில் சந்திக்கும் பிரச்சனைகளே இந்த கதையின் மையக்கரு. ஆர்பி சவுத்ரியே சிலரிடம் அழைத்து, சிறந்த கதை ஒன்றை படமாக்க போகிறேன், என்று பெருமையாக கூறியிருக்கிறார்.
ஆனால் அந்த இயக்குநர் இதுவரை 22 ஹீரோயின்களிடம் இந்த படத்தின் கதையை சொல்லி நடிக்க அழைத்திருக்கிறார். ஆனால் 4வயது சிறுவனுக்கு தாயாக நடிப்பதா என்று அந்த 22 நடிகைகளுமே மறுத்துள்ளனர். இதில் திரிஷா, நயன்தாரா, ஜோதிகா, ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றவர்களை அழைக்கவில்லை. காரணம், அவர்கள் பல கோடிகளில் சம்பளம் கேட்பவர்கள். மற்ற நடிகைகள் நல்ல கதை என தெரிந்தும், 4 வயது பையனுக்கு அம்மாவாக நடிப்பதா என்ற இமேஜ் பிரச்னையில், ஒரு நல்ல கதையை புறக்கணித்துள்ளனர். இதனால் நாயகி கிடைக்காமல் இயக்குநர் தடுமாற்றத்தில் இருககிறார்.





