கலைத்துறையில் எவ்வளவு உச்சத்தில் இருந்தாலும் அவர்கள் பொது இடங்களில் நடந்து கொள்ளும் விதம் நாகரிகமாக இருக்க வேண்டும். புகழின் உச்சியில் இருந்தாலும் பொதுவெளியில் மேடைகளில் பண்புள்ள மனிதர்களாக நடந்துக்கொள்ள வேண்டும். அநாகரிமாக பேசுவது, நடந்துக்கொள்வது அவர்களது இமேஜையே காலி செய்துவிடும்.
தமிழ் சினிமாவை பொருத்த வரை மேடை நாகரிகம் என்பது மிகவும் கவனமாக பாதுகாக்கப்படுகிறது. ரஜினி கமல் விஜய் விக்ரம் சூர்யா விஜய் சேதுபதி என யாராக இருந்தாலும் மேடைக்கு வரும்போது மிகவும் கவனமாக பேசுவார்கள். தங்கள் மீது எந்த விமர்சனமும் வராதபடி கருத்துகளை முன்வைப்பார்கள். ஆனால் அப்போதும் சில விஷயங்கள் வேறு விதமாக மாறி, அவர்களும் விமர்சனத்தில் சிக்கி விடுகின்றனர்.
ஆனால் சமீபத்தில் இயக்குனர் மிஷ்கின் பங்கேற்ற பாட்டல் ராதா பட விழாவில், காதில் கேட்க முடியாத சில கெட்டவார்த்தைகளை பேசி கடும் விமர்சனத்தில் சிக்கினார். போலி அறிவாளியாக தன்னை காட்டிக் கொள்பவர் என நடிகர் அருள்தாஸ் அவரை விமர்சித்தார். தொடர்ந்து பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில், மிஷ்கின் பொதுவெளியில் பகிரங்கமாக மன்னிப்பு கேட்டார்.
இந்தியில் பிரபல பாடகராக இருப்பவர் உதித் நாராயணன். இந்தியில் பல சூப்பர் ஹிட் பாடல்களை பாடியிருக்கிறார். தமிழிலும் பல படங்களுக்கு பாடியிருக்கிறார். குலுவாலிலே முத்து வந்தல்லோ, ராங்கி ரங்கம்மா, வாம்மா துரையம்மா, எங்கேயோ பார்த்த மயக்கம், அச்சச்சோ புன்னகை, காதல் பிசாசே, வா செல்லம் வாவா செல்லம் என பல ஹிட் பாடல்களை தமிழில் பாடியவர்.
கடந்த சில தினங்களுக்கு முன் நடந்த இசை நிகழ்ச்சி ஒன்றில் பாடகர் உதித் நாராயணன் பங்கேற்று பாடியிருக்கிறார். அப்போது மேடைக்கு அவருடன் செல்பி எடுக்க வந்த ஒரு ரசிகையை, நெஞ்சோடு அணைத்து கன்னத்தில் முத்தமிட்டுள்ளார். அதே போல் மேடைக்கு வந்த மற்றொரு ரசிகைக்கு கன்னத்தில் முத்தமிட்ட அவர், பிறகு உதட்டிலும் முத்தம் கொடுத்திருக்கிறார்.
உதித் நாராயணனின் இந்த வரம்பு மீறிய செயல் வீடியோ காட்சிகளாக இணையத்தில் வைரலானது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும், அவருக்கு எதிரான கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். உடனடியாக அவரது இந்த செயலுக்கு மன்னிப்பு கேட்ட வேண்டும் என்ற எதிர்ப்பும் வலுத்துள்ளது. பெரிய மனுஷன் இப்படியா அநாகரிகமாக நடந்துக் கொள்வார் என பெண்களும் விமர்சித்து வருகின்றனர்.





