இளையராஜாவின் இளைய ராஜா யுவன் ஷங்கர் ராஜா. அரவிந்தன் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான யுவன் முதல் படத்தில் சொல்லிக்கொள்ளும்படி ஹிட் பாடல்களை கொடுக்கவில்லை. இருந்தாலும் இயக்குநர் யுவன் மீது அபார நம்பிக்கை வைத்து பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் இசையமைப்பதற்கான வாய்ப்பை வழங்கினார்.
அந்தப் படத்துக்கு இசையமைக்கும்போது 17 வயதுதான். ஆனால் வயதுக்கு மீறிய பக்குவத்தில் அந்தப் படத்தின் இசை இருந்தது. படத்தின் பாடல்கள், பிஜிஎம், ரீ ரெக்கார்டிங் என அனைத்திலும் ரவுண்டு கட்டி அடித்தார் யுவன் ஷங்கர் ராஜா. பூவெல்லாம் கேட்டுப்பார் படத்துக்கு பிறகு யுவன் சில படங்களில் மட்டுமே கமிட்டாகிவந்தார். இசை சிறப்பாக இருந்தாலும் அவருக்கு வரிசையாக வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இப்படிப்பட்ட சூழலில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் அஜித் நடித்த தீனா படத்துக்கு கமிட்டானார் யுவன். அந்தப் படத்திலிருந்து யுவனின் கிராஃப் உச்சம் சென்றது. அதனையடுத்து அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைத்தன. அப்படி அவர் இசையமைத்த காதல் கொண்டேன், புதுக்கோட்டையிலிருந்து சரவணன், 7ஜி ரெயின்போ காலனி, நந்தா, புதுப்பேட்டை, பில்லா என வரிசையாக ஹிட்டை கொடுத்துக்கொண்டிருந்தார்.
அப்போதிலிருந்து இப்போதுவரை தமிழின் டாப் 5 இசையமைப்பாளர்களின் வரிசையில் தனக்கான ஒரு இடத்தை பிடித்து நிலைத்திருக்கிறார். அவரது இசையை பெரிய போதை என்றும்; யுவன் ஒரு ட்ரக் டீலர் என்றும் அவரது ரசிகர்கள் கூறுவார்கள். அவரது இசையமைப்பில் கடைசியாக லவ் டுடே படம் வந்து மெகா ஹிட்டடித்தது.
இந்தச் சூழலில் வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் தளபதி 68க்கு யுவன் இசையமைக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். யுவன் இதுவரை 100 படங்களுக்கும் மேல் இசையமைத்திருந்தாலும் விஜய்க்கு புதிய கீதை படத்திற்கு மட்டும்தான் இசையமைத்திருக்கிறார். எனவே பல வருடங்கள் கழித்து தற்போது யுவன் விஜய்க்கு இசையமைக்கிறார். எனவே இந்தப் படத்தின் இசை மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
Happy bday Thambi @thisisysr waiting for u to rock #Thalapathy68
— venkat prabhu (@vp_offl) August 31, 2023
இந்நிலையில் யுவன் ஷங்கர் ராஜா இன்று தனது 44ஆவது பிறந்தநாளை கொண்டாடிவருகிறார். அவருக்கு பலரும் தங்களது வாழ்த்தினை தெரிவித்துவருகிறார்கள். அந்தவகையில் யுவனின் சகோதரரும், இயக்குநருமான வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், “பிறந்தநாள் வாழ்த்துகள் தம்பி. தளபதி 68ல் உனது சிறந்த இசையை கேட்க காத்திருக்கிறேன்” என பதிவிட்டிருக்கிறார்.





