நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் நேற்று வேட்டையன் படம் ரிலீஸானது. லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில், இயக்குனர் தசெ ஞானவேல் இயக்கிய இந்த படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் ஆரம்பத்தில் இருந்தே நல்ல எதிர்பார்ப்பு இருந்தது. அதுவும் ஜெயிலர் படத்துக்கு பிறகு வரும் படம் என்ற முக்கியத்துவமும் காணப்பட்டது.
இந்த படத்தில் ரஜினி என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் என்பதும், அமிதாப் பச்சன் கேமியோ ரோலில் நடித்திருக்கிறார் என்பதும் படத்துக்கு இன்னும் கூடுதல் முக்கியத்துவத்தை பெற்றுத் தந்தது. அத்துடன் எஜூகேஷனல் மாபியா குறித்தும் இந்த படம் பேசுவதால், ஜெய்பீம் படத்தை தந்த தசெ ஞானவேல் இந்த படத்தில் தரமான சம்பவமாக செய்திருப்பார் எனவும் கூறப்பட்டது.
ஆனால் நேற்று ரிலீஸான வேட்டையன் படம் பார்த்த ரசிகர்களுக்கு, அந்தளவுக்கு படம் திருப்தியளிக்கவில்லை. ரஜினிகாந்த் படம் என்றாலே ஒரு மாஸ் இருக்கும். இந்த படத்தில் அது சுத்தமாக இல்லை. அதுவும் இடைவேளைக்கு பிறகு சிலர் தூங்கி விட்டதாகவும் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினர்.
இந்நிலையில் வேட்டையன் படம் முதல் நாளிலேயே மிகப்பெரிய வசூல் சாதனையை புரியும் என்று கூறப்பட்டது. ஆனால் நேற்று தமிழ்நாடு முழுவதும் வேட்டையன் படம் வசூலித்தது, ரூ. 17 கோடிதான். அதே போல் உலகம் முழுவதும் வசூலித்தது மொத்தமே 60 கோடி ரூபாய்தான் என்ற தகவல் தற்போது வெளியாகி, ரஜினி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
ஜெயிலர் படத்துக்கு கிடைத்த ஓப்பனிங், இந்த படத்துக்கு சுத்தமாக கிடைக்கவில்லை. அதுமட்டுமின்றி இந்த படத்துக்கான பிரமோசன், கடந்த 10 நாட்களாகவே சுத்தமாக இல்லை என்றும் தெரிய வந்துள்ளது. வழக்கமான ரஜினி படத்தின் இயக்குனர், உடன் நடித்த நடிகர், நடிகையர் பிரமோசன் நிகழ்ச்சிகளில் பங்கேற்று படத்தை நன்கு விளம்பரப்படுத்துவர். ஆனால் வேட்டையன் படத்தில் அது நடக்கவில்லை.
அதுமட்டுமின்றி ரஜினி படங்கள் என்றாலே தமிழ்நாட்டில் 800 தியேட்டர்களுக்கு மேல் ரிலீஸாகும். ஆனால் வேட்டையன் படம் மொத்தமாக 600 தியேட்டர்களில்தான் ரிலீஸாகி உள்ளது. லப்பர் பந்து படம் இன்னும் 150 தியேட்டர்களிலும், மெய்யழகன் படம் 100 தியேட்டர்களிலும் ஓடிக்கொண்டு இருப்பதால், அதன்காரணமாகவும் வேட்டையன் வசூல் கணிசமாக குறைந்திருக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இனி வரும் நாட்களில் வேட்டையன் வேகம் பிடிப்பாரா என்பது தெரிய வரும்.





