நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கியிருப்பதாக கடந்த மாதம் 2ம் தேதி அறிவித்தார். இப்போது கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் என்ற படத்தில், இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் நடித்து வரும் அவர், இந்த மாதம் 31ம் தேதியுடன் இந்த படத்தின் ஷூட்டிங்கை நிறைவு செய்கிறார். தொடர்ந்து வரும் ஏப்ரல் மாதத்தில் மதுரையில் பிரமாண்டமான கட்சி மாநாடு நடத்தவும் முடிவு செய்துள்ளார்.
இந்த மதுரை மாநாட்டில்தான் கட்சியின் முக்கிய கொள்கைள், அரசியலுக்கு வந்தததற்கான காரணங்கள், அவரது எதிர்கால திட்டங்கள், கட்சிக்கொடி உள்ளிட்டவை குறித்த பல்வேறு தகவல்களையும் தமிழக வெற்றிக் கழகம் தலைவர் விஜய் அதிகாரபூர்வமாக அறிவிக்க இருக்கிறார். அதனால் இந்த மாநாடு, தமிழக அரசியல் வரலாற்றில் மிக முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் விஜயை பொருத்த வரை தனது அரசியல் பிரவேசத்தை அவர் மிகவும் தெளிவாக திட்டமிட்டு காய் நகர்த்தி வருகிறார். அதனால்தான் சினிமாவில் உச்சக்கட்டத்தில் நெம்பர் 1 பொசிஷனில் இருக்கும்போதே அரசியல்வாதியாக தனது பயணத்தை மாற்றி அமைக்கிறார். பெரும்பாலான நடிகர்கள் சினிமாவில் மார்க்கெட் இழந்த பிறகுதான் அரசியலுக்கு வருவதுதான் வழக்கமாக இருந்து வருகிறது.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர், நடிகர் விஜயகாந்த் ஆகியோரை மனதில் வைத்து அவர்களை போல தனது அரசியல் வாழ்க்கை, மக்கள் செல்வாக்கு இருக்க வேண்டும் என்பதில் விஜய் மிகவும் குறிக்கோளாக இருக்கிறார். அதாவது அரசியலுக்கு வந்துவிட்டால், ஒருமுறை மக்கள் அபிமானத்தில் அங்கீகாரம் கிடைத்து வெற்றி பெற்று விட்டால், அந்த அங்கீகாரம் அடுத்தடுத்த சட்டசபை தேர்தல்களிலும் அது நீடிக்க வேண்டும்.
அப்போதுதான் தன்னால் எம்ஜிஆரை போல நிரந்தர ஆட்சியை தர முடியும். விஜயகாந்த் அரசியலுக்கு வந்த போது ஜெயலலிதா, கருணாநிதி இருவருமே அரசியல் களத்தில் இருந்தனர். அவர்களை எதிர்த்துதான் அவர் அரசியல் களத்தில் நின்றார். பெருவாரியான அளவில் அதிக ஓட்டுகளை பெற்றார். அதுபோன்ற ஒரு நிலையில், யாராக இருந்தாலும் தன்னுடைய செல்வாக்கு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதே விஜயின் ஆசையாக இருக்கிறது.
ஆனால், அரசியலுக்கு வருவதால் இப்போது நடித்து வரும் படம், இனி ஒரு படம் என 2 படங்களில் நடிப்பதோடு சரி. இனி தொடர்ந்து படங்களில் நடிக்க மாட்டேன் என்று நடிகர் விஜய் அறிவித்துள்ளார். சமீபத்தில் ஒரு நேர்காணலில் பேசிய நடிகை விசித்ரா, நடிகர் விஜய் அரசியலுக்கு வந்தாலும் தொடர்ந்து அவர் நடிக்க வேண்டும். அவரது ரசிகர்கள் இன்னும் அவர் நடிக்கும் படங்களை எதிர்பார்க்கின்றனர், என்று கூறியிருக்கிறார்.





