தமிழ் சினிமாவில் பாக்ஸ் ஆபிஸ் கிங்காக கொடிகட்டி பறப்பவர் தளபதி விஜய். ஓடிடி, சாட்டிலைட், இசை என அனைத்து உரிமத்திலும் விஜய் திரைப்படங்கள் கோடிக்கணக்கான ரூபாயை பார்க்க, வசூல் சக்கரவர்த்தியாக அவர் வலம் வருகிறார். இன்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி இருக்கும் நடிகர் விஜய்க்கு, ஆரம்ப காலம் சோதனை காலமாகவே அமைந்தது.
தனது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் மூலம் திரைத்துறையில் அறிமுகமான அவர், தொடர்ந்து பல்வேறு திரைப்படங்களில் நடித்து வந்தார். குறிப்பாக, எஸ்.ஏ சந்திரசேகரின் திரைப்படங்களில் மட்டும்தான் விஜய்யை திரையரங்குகளில் பார்க்க முடிந்தது. நாளைய தீர்ப்பு, செந்தூர பாண்டி, விஷ்ணு, மாண்புமிகு மாணவன், ஒன்ஸ்மோர் என அனைத்து திரைப்படங்களும் எஸ்ஏசி இயக்கியது தான்.
இந்த நிலையில், தனது மகனுக்காக வெவ்வேறு இயக்குனர்களிடம் எஸ் ஏ சந்திரசேகர் போய் நிற்க, அங்கிருந்து விஜயின் திரை பயணம் ஆரம்பித்தது. பூவே உனக்காக, துள்ளாத மனமும் துள்ளும், காதலுக்கு மரியாதை என அவர் நடிப்பில் வெளியான திரைப்படங்கள் மெகா ஹிட் அடித்தன.
இப்போது விஜய் இந்த நிலைமைக்கு இருக்க முக்கிய காரணம் அவர் தந்தைதான் என்று உறுதியாக கூறலாம். இப்படியான சூழ்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக தந்தைக்கு மகனுக்கும் இடையே பனிப்போர் நிலவி வருகிறது. விஜயை அரசியலுக்கு வரச் சொல்லி அவரது தந்தை எஸ் ஏ சந்திரசேகர் கட்டாயப்படுத்துவதாகவும், இது நடிகருக்கு பிடிக்கவில்லை என்றும் கூறப்பட்டது.
இது ஒரு பக்கம் இருக்க, திடீரென விஜய்யின் பெயரில் ஒரு அரசியல் கட்சியை ஆரம்பித்தார் எஸ் ஏ சந்திரசேகர். உடனடியாக இதற்கு பதில் அளித்த விஜய், தான் எந்த ஒரு கட்சியையும் தொடங்கவில்லை என்று விளக்கம் அளித்தார். இதனால் தந்தைக்கு மகனுக்கும் இடையே விரிசல் ஏற்பட்டது. அதுமட்டுமில்லாமல் பொது நிகழ்ச்சிகளில், மேடை ஏறும் விஜய் தனது தந்தையை கண்டு கொள்வதில்லை என்ற ஒரு பேச்சும் இருந்தது.
Thalapathy Vijay met his father, SAC, today after returning from abroad, as his dad underwent surgery. pic.twitter.com/C3QcJnGn85
— Christopher Kanagaraj (@Chrissuccess) September 13, 2023
இப்படியான சூழ்நிலையில், எஸ்.ஏ சந்திரசேகர் தனியார் மருத்துவமனையில் இதய அறுவை சிகிச்சை செய்து கொண்டார். இது குறித்த ஆடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டார். தந்தைக்கு இப்படி இருக்கும்போது மகன் விஜய் எங்கே போனார் என்று பலரும் கேள்வி எழுப்பி வந்தனர். இந்த நிலையில் வெங்கட் பிரபு படம் வேலை தொடர்பாக கலிபோர்னியா சென்று திரும்பிய விஜய், தனது பெற்றோரை மருத்துவமனைக்கு சென்று பார்த்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.





