தமிழில் பல வெற்றிப் படங்களை தயாரித்த நிறுவனம் லைகா புரடக்சன்ஸ். இந்நிறுவன தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் கடந்தாண்டில் வெளியான படம் இந்தியன் 2. கங்குவா படத்தை போல், மிக கடுமையாக விமர்சிக்கப்பட்ட தோல்வி படம்தான் இந்தியன் 2 என்பது குறிப்பிடத்தக்கது.
இதைத் தொடர்ந்து லைகா புரடக்சன்ஸ் தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் இந்தியன் 3 படம் வெளிவர இருக்கிறது. ஆனால் இன்னும் ஒரு மாத படப்பிடிப்பு மீதமுள்ளது. அதற்காக ரூ. 60 கோடி முதல் ரூ. 80 வரை லைகா நிறுவனத்திடம் ஷங்கர் கேட்டுள்ளார். அதில் ஷங்கர் சம்பளம் ரூ. 30 கோடியும் அடங்கியுள்ளது.
இந்தியன் 2 படம் தந்த பலத்த நஷ்டத்தில் இருந்தே நாங்கள் இன்னும் மீளவில்லை. உங்கள் சம்பளத்தை கழித்துவிட்டு படம் தயாரிப்புக்கான செலவை மட்டும் கேளுங்கள். அதற்கு முன்பாக இந்தியன் 2 படத்தை எடுத்தது வரை போட்டு காட்டுங்கள் என்று லைகா நிறுவனம் கேட்டுள்ளது. அதற்கு ஷங்கர் மறுத்துவிட்டார். இந்த பஞ்சாயத்து காரணமாக லைகா, இயக்குனர் ஷங்கர் இடையே பஞ்சாயத்து நீடிக்கிறது.
இந்த சூழலில் இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்த கேம் சேஞ்சர் படம் வருகிற 10ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. இதற்கான பிரமோஷன் பணிகளில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. இந்த படத்தின் தயாரிப்பாளர், விஜய் நடித்த வாரிசு படத்தை தயாரித்தவர். தெலுங்கு சினிமாவில் தயாரிப்பாளர் சங்க தலைவர், வினியோகஸ்தர் சங்க தலைவர், திரையரங்கு உரிமையாளர் சங்க தலைவர் என உச்ச அதிகாரத்தில் இருப்பவர்.
ஒட்டுமொத்தமாக தெலுங்கு திரையுலகமே இவரது கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சூழலில்தான், லைகா நிறுவனம் இயக்குனர் ஷங்கர் மீதுள்ள கடுப்பால் திரைப்பட கவுன்சில் மற்றும் பெடரேஷனில் ஒரு புகார் அளித்துள்ளது. அதில் இந்தியன் 2 விவகாரத்தில் ஷங்கர் இயக்கிய கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் ரிலீஸ் செய்யக் கூடாது, தடை விதிக்க வேண்டும் என்று கூறியுள்ளது.
இதனால் ஆவேசமடைந்த கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜூ, இயக்குனர் ஷங்கருக்கும், லைகா நிறுவனத்துக்கும் உள்ள தனிப்பட்ட பிரச்னையில் நான் தயாரித்த படத்தை தமிழகத்தில் ரிலீஸ் செய்ய தடை விதிக்க லைகா நிறுவனம் சொல்வது மிகவும் தவறு. அப்படி தடை விதித்தால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் இனி ஒரு தமிழ் படம் ரிலீஸ் ஆகாது என எச்சரித்துள்ளார். இதையறிந்த தமிழ் சினிமா துறையினர் வெலவெலத்து போயுள்ளனர்.





