பிக் பாஸ் நிகழ்ச்சி, அக்டோபர் ஆறாம் தேதியான ஞாயிற்றுக்கிழமை தொடங்குகிறது. ஒரு வீட்டில் பதினைந்திருக்கும் மேற்பட்டோர் அடைத்து வைக்கப்பட்டிருக்க, அவர்களுக்குள் நடைபெறும் சம்பவங்களை தொகுத்து இந்த பிக் பாஸ் நிகழ்ச்சி வழங்குகிறது.
வெளிநாடுகளில் பிரபலமான இந்த ஷோ, தமிழ்நாட்டிலும் கொண்டுவரப்பட்டது. இதற்கான ஏழு சீசன்களை தொகுத்து வழங்கியிருக்கிறார் கமல்ஹாசன். இதன் மூலம் சின்னத்திரையில் ஒவ்வொரு இல்லத்திற்கும், தொலைக்காட்சியின் மூலம் செல்லும் வாய்ப்பை கமல்ஹாசன் பெற்றார்.
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வரும் கமல்ஹாசன், பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பல்வேறு விஷயங்களை பகிர்வார். நிகழ்ச்சிக்கு அப்பாற்பட்டு, சில நூல்கள் குறித்தும் கமல்ஹாசன் பேசுவார். அது நிச்சயம் பார்வையாளர்களுக்கு பயனுள்ளதாகவே இருந்து வந்தது. இதுபோக, கமல்ஹாசன் சில சமயம் அரசியல் கருத்துகளையும் திணிப்பதாக சிலர் கூறி வந்தனர்.
ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, பிக் பாஸ் நிகழ்ச்சியில் கமல்ஹாசன் வேறு ஒரு பரிணாமத்தில் தெரிந்தார் என்று தான் கூற வேண்டும். தனது உடல் மொழியில் வித்தியாசம் காட்டிய கமல்ஹாசன், போட்டியில் பங்கேற்பவர்களில் தவறு செய்பவர்களை அவ்வபோது கண்டித்தும் கைத்தட்டல்களை பெற்றார்.
இப்படி ஏழு சீசங்களில் அவர் வலம் வந்திருக்கும் சூழலில் தற்போது எட்டாவது சீசனை தொகுத்து வழங்குவதற்காக வந்திருக்கிறார் விஜய் சேதுபதி. கமலஹாசன் இருந்த இடத்திற்கு நடிகர் வந்திருப்பதால், அவர் எப்படி இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போகிறார் என்பதில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. விக்ரம் திரைப்படத்தின் போதே கமல்ஹாசனுக்கும் விஜய் சேதுபதிக்கும் இடையே நல்ல நட்புறவு இருந்ததாக கூறப்படும் நிலையில், நிகழ்ச்சி குறித்த சில அனுபவங்களை கமலஹாசன் விஜய் சேதுபதியிடம் பகிர்ந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் பிக் பாஸ் நிகழ்ச்சிக்காக விஜய் சேதுபதிக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் முதல் சீசன் தொடங்கும் போதே கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்காக 30 கோடி ரூபாய் சம்பளம் பெற்று இருந்தார். கடைசி சீசனுக்கு அவர் வாங்கிய சம்பளம் மட்டும் 130 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இப்படியான சூழலில் கமலுக்கு வழங்கப்பட்ட சம்பளத்தை ஒப்பிடும் போது விஜய் சேதுபதிக்கு மிக குறைந்த தொகையை வழங்கப்பட்டு இருப்பதாக சிலர் கூறி வருகிறார்கள்.





