கோலிவுட் திரையுலகை தாண்டி இந்திய திரையுலகில் தெரியப்படும் நட்சத்திரமாக இருப்பவர் விஜய் சேதுபதி. இதற்கு மகாராஜா திரைப்படம் மிக முக்கியமான காரணம் என்று கூறலாம். நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. சாதாரண ஒரு பழிவாங்கல் கதையை, மிக சுவாரஸ்யமாக கொடுத்து, நான்லீனியரில் கதையை கூறி அசர வைத்திருந்தார் இயக்குனர் நித்திலன் சுவாமிநாதன்.
இந்தத் திரைப்படம் திரையரங்குகளை தாண்டி ஓடிடி தளத்தில் வெளியானபோது பல்வேறு மாநிலங்களிலும் பேசப்பட்டது. பலரும் அந்தத் திரைப்படத்தை பாராட்டினார்கள். சீன மொழியில் டப் செய்யப்பட்ட மகாராஜா அங்கேயும் வெற்றி கொடியை நாட்டியது. இந்த திரைப்படத்திற்கு முன்னதாகவே பாலிவுட்டில் பலராலும் அறியப்பட்ட நட்சத்திரமாக விஜய் சேதுபதி இருந்தார்.
இதற்கு முக்கிய காரணம் அந்த நேரத்தில் ரிலீஸ் செய்யப்பட்ட ஜவான் திரைப்படம்தான். அட்லி இயக்கத்தில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்திருந்த அந்த திரைப்படம் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் ஈட்டியது. அதில் வில்லனாக வந்து மிரட்டி இருந்தார் விஜய் சேதுபதி. இந்த திரைப்படத்தில் நடித்ததற்காக தேசிய விருதை ஷாருக்கான் பெற்றிருந்தார்.
இது ஒரு பக்கம் இருக்க நடப்பு ஆண்டிலேயே விஜய் சேதுபதிக்கு இரண்டு திரைப்படங்கள் ரிலீஸ் ஆகிவிட்டன. இதில் ஏஸ் திரைப்படம் ரிலீஸ் ஆனது பலருக்கும் கூட தெரியாது என்று கூறலாம். விமர்சன ரீதியாக ஓரளவு இந்த திரைப்படம் பேசப்பட்டாலும் சரியான மார்க்கெட்டிங் இல்லாததால் தோல்வி அடைந்தது. அடுத்ததாக தலைவன் தலைவி திரைப்படம் விஜய் சேதுபதிக்கு வெளியானது.
பாண்டிராஜ் இயக்கத்தில் நித்யா மேனன் கதாநாயகியாக நடித்திருந்த இந்த திரைப்படம் கலவையான விமர்சனத்தை பெற்றது. அதேசமயம் குடும்பம் குடும்பமாக பலர் இந்த திரைப்படத்திற்கு சென்றதால் 100 கோடி ரூபாய் வசூல் ஈட்டியது. இந்த நிலையில் அடுத்ததாக முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸிலும், மிஸ்கின் உடனான ட்ரெயின் படத்திலும், பூரி ஜெகநாத் உடனான படத்திலும் கவனம் செலுத்தி வருகிறார் விஜய் சேதுபதி.
இதன் நடுவே தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக பிக் பாஸ் நிகழ்ச்சியையும் அவர் தொகுத்து வழங்குகிறார். அந்த நிகழ்ச்சி தற்போது தொடங்கி இருக்கிறது. இதில் கலந்துகொண்டு பேசிய விஜய் சேதுபதி, எனது மகன் எப்போது பார்த்தாலும், தன்னை சிலம்பரசன் ரசிகன் சிலம்பரசன் ரசிகன் என்றே சொல்லிக் கொண்டிருக்கிறான். அவனிடம் நான் ஒரு நடிகன், இந்த வீட்டில் இருக்கிறேன் அது உனக்குத் தெரியவில்லையா என்று கேட்பேன் என தெரிவித்துள்ளார். விஜய் சேதுபதியின் இந்த பேச்சு சிம்பு ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. விஜய் சேதுபதியின் மகனான சூர்யா, கதாநாயகனாக நடித்த பீனிக்ஸ் திரைப்படம் அண்மையில் வெளியானது குறிப்பிடத்தக்கது.





