இயக்குனர் பாரதிராஜா இயக்கத்தில் கண்களால் கைது செய் படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பிரியாமணி. அழகும், நடிப்புத்திறமையும் உள்ள பிரியாமணி, அமீர் இயக்கிய பருத்திவீரன் படத்தில் முத்தழகு கேரக்டரில் அழுத்தமான நடிப்பை வெளிப்படுத்தி மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது வாங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து நினைத்தாலே இனிக்கும் அது ஒரு கனாக்கலாம் மலைக்கோட்டை ஆறுமுகம் தோட்டா ராவணன், சாருலதா, இந்தியில் ஜவான் உள்ளிட்ட பல படங்களில் நடித்து தன்னை சிறந்த நடிகையாக வெளிப்படுத்தியவர். தளபதி 69 படத்தில் முக்கிய கேரக்டரில் பிரியாமணி நடிக்கிறார் என்ற தகவல் சமீபத்தில் வெளியானது.
அதே போல் தமிழ் சினிமாவில் போடா போடி படம் மூலம் அறிமுகமானவர் வரலட்சுமி சரத்குமார். நடிகர் சரத்குமாரின் முதல் மனைவி சாயாதேவியின் மகள் இவர். தாரை தப்பட்டை, கன்னிராசி 2, சர்கார், நிபுணன், மாரி 2, சண்டக்கோழி 2, ராயன், ஹனுமான் உள்ளிட்ட பல படங்களில் நடித்திருக்கிறார்.
நடிகைகள் பிரியாமணி, வரலட்சுமி சரத்குமார் இருவரும் அழகான நடிகைகளாக இருந்தாலும் அவர்களது குரலிலும், தோற்றத்திலும் ஒரு மிடுக்கும், ஒரு அதிகார தோரணையும் காணப்படும். அதனால் போலீஸ் அதிகாரி, ராங்கியான பெண் போன்ற கேரக்டர்களில், வில்லி கேரக்டர்களில் இவர்களது நடிப்பு பெரிய அளவில் ரசிகர்களை கவரும் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால் சமீபத்தில் வெளியாகி தமிழ் சினிமாவில் மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் லப்பர் பந்து. இந்த படத்தில் கெத்து தினேஷ், ஹரீஷ் கல்யாண், காளி வெங்கட், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, சுவாசிகா, கீதா கைலாசம், தேவதர்ஷினி, பால சரவணன், ஜென்சன் திவாகர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இதில் கெத்து தினேஷ் மனைவியாக, யசோதை என்ற கேரக்டரில் நாயகியின் அம்மாவாக சுவாசிகா நடித்திருந்தார். படத்தில் இவரது நடிப்பு தனித்துவமும் அழுத்தமும் கொண்டதாக இருந்தது. லப்பர் பந்து படத்தில் யசோதை கேரக்டரில் அவர் வாழ்ந்திருந்தார். அந்த கேரக்டரில் முதலில் பிரியாமணி நடிப்பதாக இருந்துள்ளது. பிறகு வரலட்சுமி சரத்குமார் நடிக்கவும் திட்டமிடப்பட்டு கடைசியில், சுவாசிகா நடித்திருக்கிறார். நிச்சயமாக பிரியாமணியோ, வரலட்சுமியோ நடித்திருந்தால் சுவாசிகா அளவுக்கு இருந்திருக்காது என ரசிகர்கள் கமெண்ட் செய்துள்ளனர்.





