போடா போடி, நானும் ரவுடிதான், தானா சேர்ந்த கூட்டம், காத்து வாக்குல ரெண்டு காதல் என நான்கு திரைப்படங்களை இயக்கி இருக்கிறார் விக்னேஷ் சிவன். பிரபல நடிகை நயன்தாராவின் கணவரான இவர், படங்களை தயாரிப்பதிலும் கவனம் செலுத்தி வருகிறார். கணவன் மனைவி இருவரும் இணைந்து ரவுடி பிக்சர்ஸ் என்னும் நிறுவனத்தை நடத்தி வருகின்றனர். இது மட்டுமல்லாமல், பிசினஸிலும் விக்னேஷ் சிவன் ஈடுபட்டு வருகிறார்.
இவர் காத்து வாக்குல ரெண்டு காதல் திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து இயக்குவதாக இருந்தது. இதன் அறிவிப்பு 2022 ஆம் ஆண்டு வெளியானது. லைக்கா நிறுவனம் இந்த படத்தை எடுப்பதாகவும் சொல்லப்பட்டது. சற்றும் எதிர்பார்க்காத இந்த கூட்டணியால், ஆச்சரியப்பட்ட ரசிகர்கள், இது எந்த மாதிரியான திரைப்படமாக இருக்கும் என்று இணையத்தில் கேள்வி எழுப்ப ஆரம்பித்தனர்.
ஆனால் தயாரிப்பு நிறுவனத்திற்கும் விக்னேஷ் சிவனுக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் அந்த திரைப்படம், வெறும் அறிவிப்போடு நின்று போனது. அஜித்தை இயக்கும் வாய்ப்பு மகிழ் திருமேனிக்கு கிடைத்தது. விடாமுயற்சி என இதற்கு பெயர் வைக்கப்பட்டு, சூட்டிங் அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. அதேசமயம் விக்னேஷ் சிவன் குறித்து அடுத்த படத்தின் அறிவிப்பும் வெளியாகாமலையே இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் பிரதீப் ரங்கநாதன் ஆகியோர் இணைந்து படம் எடுப்பதாக அறிவிக்கப்பட்டது. இதில் பிரதிப் ரங்கநாதன் கதாநாயகனாக நடிப்பதாகவும், அவருடன் எஸ் ஜே சூர்யா, யோகி பாபு உள்ளிட்டோ நடிப்பதாகவும் தகவல் வெளியானது. இந்த திரைப்படத்தை முதலில் கமல்ஹாசனின் ராஜ்கமல் இன்டர்நேஷனல் ஃபிலிம்ஸ் தயாரிப்பதாக இருந்தது. ஆனால் திடீரென தயாரிப்பாளர் மாறி போய், லியோ படத்தை எடுத்த லலித் குமார் இயக்குவதாக அறிவிக்கப்பட்டது.
இதன், பட பூஜைக்கான வீடியோவும் சமீபத்தில் வெளியானது. இந்தப் படத்தில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக கீர்த்தி ஷெட்டி நடிக்கிறார். படத்திற்கு லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் அதாவது எல்ஐசி என பெயர் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த டைட்டிலுக்கு ஆரம்பம் முதலே எதிர்ப்பு வலுத்து வருகிறது. இயக்குனர் எஸ் எஸ் குமரன், இது தன்னுடைய டைட்டில் என்று கூறி வருகிறார். அதேசமயம் எல்ஐசி நிறுவனமும், இந்த டைட்டிலை வைக்கக்கூடாது என்று கூறி விக்னேஷ் சிவனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க தனது படத்திற்கான வேலையை தீவிரப் படுத்தி வருகிறார் விக்னேஷ் சிவன். இந்தப் படத்தில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நடிப்பதாக இடையே தகவல் வெளியானது. இந்த நிலையில், சமூக வலைத்தளங்களில் தங்கள் நிறுவன சோபாவை அடுத்த தளத்திற்கு கொண்டு செல்லும் சிறுவன் ரசூலும் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்த சிறுவனை இணையதளவாசிகள் அனைவரும் சோபா பாய் என்று அழைக்கின்றனர். அந்த அளவுக்கு அவரின் வீடியோ, இணையதளத்தில் பரவி இருக்கிறது. தற்போது இந்த சிறுவன் பெரிய திரையிலும் தோன்ற இருப்பது பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.





