இசைஞானி இளையராஜாவின் தம்பி கங்கை அமரன். இவரும் ஏராளமான படங்களுக்கு இசையமைத்துள்ளார், கரகாட்டக்காரன் போன்ற பல வெற்றி படங்களின் இயக்குநர். பல நல்ல பாடல்களை பாடியிருக்கிறார். இப்போது பாஜகவில் முக்கிய பொறுப்பில் இருக்கும் கங்கை அமரனின் மகன்கள் இயக்குநர் வெங்கட்பிரபு, நடிகர் பிரேம்ஜி என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க தேர்தல் நேற்று நடந்த நிலையில், அங்கு வந்த இசையமைப்பாளர் கங்கை அமரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது, எங்கள் வீட்டில் நடந்த துக்க நிகழ்வு உங்கள் அனைவருக்கும் தெரியும். இந்த இடத்தில் இளையராஜாவுக்கு பதிலாக நான் பேச வந்திருக்கிறேன்.
திரைப்பட உலகில் கலைஞர்களுக்காக முதலில் உருவாக்கப்பட்டதே இசைக்கலைஞர்கள் சங்கம்தான். இதன் பிறகுதான் மற்ற சங்கங்கள் வந்தன. தினமும் சம்பளம் இல்லாத அந்த காலத்தில், சங்கத்தில் இருந்த பெரியவர்கள்தான் போராடி அதை வாங்கி தந்தார்கள். அதனால்தான் இன்று அனைவரும் நன்றாக இருக்கிறோம்.
அதனால் இந்த சங்கத்தை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில் இங்கு அனைவரும் வந்திருக்கிறோம். இந்த சங்கம் நன்றாக இருக்க வேண்டும். இந்த சங்கத்தில் ஒருவரது பதவிக்காலம் 2 ஆண்டுகள்தான். அதற்கு பிறகு நீட்டித்துக் கொள்ளலாம். இதுவரை அப்படிதான் 2 ஆண்டுகள் பதவியில் இருந்தார்கள். மேலும் சங்க விதிகளின் படி 4 ஆண்டுகள் வரை இருக்கலாம்.
ஏற்கனவே நடந்த தேர்தலில், தன் அதிகாரத்தை பயன்படுத்தி இசையமைப்பாளர் தீனா 4 ஆண்டுகள் வரை பதவியில் இருந்துவிட்டார். இன்னும் நான்தான் பதவியில் இருக்கப் போகிறோம் என்றும் நினைத்துக்கொண்டு இருக்கிறார். நல்ல உழைப்பை, அனுபவத்தை தருபவர்கள்தான் சங்கத்தில் இருக்க வேண்டும் என்பது இளையராஜா போன்றவர்களின் கருத்தாக இருக்கிறது.
இந்த சங்கத்தில் நடக்க கூடாத தகாத சம்பவங்கள் நடந்திருக்கிறது. கொரோனா காலகட்டத்தில், பலருக்கும் பணம் கொடுத்ததாக 80 லட்சம் ரூபாய் வரை பணம் கையாடல் நடந்திருக்கிறது. பவதாரணியின் கையெழுத்தை போலியாக போட்டுக் கூட பணத்தை திருடி எடுத்துள்ளனர். புதிய தலைவர் வந்தால், இந்த திருட்டுகள் தெரிந்து விடும் என்று தீனா பயப்படுகிறார். அதனால்தான் அவர் மீண்டும் தலைவராக முயற்சிக்கிறார் என, கங்கை அமரன் ஆவேசமாக கூறியிருக்கிறார்.





