நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் ( டிவிகே) என்ற அரசியல் தலைவராக இருக்கிறார். கடந்த பிப்ரவரி மாதம் 2ம் தேதி, பிற்பகல் அவர் தனது அரசியல் பிரவேசத்தை அறிவித்தார். மேலும் வருகிற நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை. யாருக்கும் ஆதரவு இல்லை. 2026 சட்டசபை தேர்தல்தான் எங்கள் இலக்கு என்றும் அறிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.
இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் இப்போது நடித்து வரும் த கிரேட்டஸ்ட் ஆப் ஆல்டைம் படத்துக்கு பிறகு அவர் தனது 69 படத்தில் மட்டுமே நடிக்க இருப்பதாகவும் அதன்பிறகு நடிப்புக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டு, அரசியலில் முழு மூச்சாக ஈடுபடப் போவதாகவும் அறிவித்துள்ளார். அதனால் அவரது அடுத்த பட இயக்குநர் யார் என்பதில் பலத்த போட்டியே நடக்கிறது. இறுதியாக எச் வினோத் உறுதி செயயப்பட அதிக வாய்ப்புகள் உள்ளன.
இதற்கிடையே சில தினங்களுக்கு முன், தமிழக வெற்றிக்கழகம் கட்சியில் இணைய, செயலி ஒன்றை அதன் தலைவர் விஜய் அறிமுகப்படுத்தி வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதன்பிறகு சில மணி நேரங்களில் பல லட்சம் பேர் அந்த செயலியை பயன்படுத்தியதால், அப்படியே இணையமே ஸ்தம்பித்து விட்டதாக தகவல் பரவியது. இதுவரை 50 லட்சத்துக்கு மேல் அந்த செயலி வாயிலாக, டிவிகே உறுப்பினர்களாகி விட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்று நடிகர் விஜய், தமிழக வெற்றிக்கழகம் சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டார். அதில் சிஏஏ சட்டத்துக்கு எதிராக தனது எதிர்ப்பை தெரிவித்துள்ளார். சமூக நல்லிணக்கத்துடன் மக்கள் வாழும் சூழலில், பிளவுவாத அரசியலை முன்னிறுத்தி செயல்படுத்தப்படும் சிஏஏ போன்ற சட்டங்கள் ஏற்புடையதல்ல. தமிழ்நாட்டில் குடியுரிமை சட்டத்தை அமல்படுத்த மாட்டோம் என ஆட்சியாளர்கள் உறுதியளிக்க வேண்டும் என அதில் கூறியுளளார்.
ஆனால் இந்த சட்டத்துக்கு எதிராக, தமிழகத்தில் ஆட்சி செய்துக்கொண்டிருக்கும் திமுக அரசு தன்னுடைய எதிர்ப்பை தெரிவித்து விட்டது. தமிழக சட்டசபையில் இதுகுறித்த தீர்மானமும் கொண்டு வரப்பட்டு, தமிழகத்தில் சிஏஏ கிடையாது என தீர்மானமும் கொண்டு வந்து நிறைவேற்றப்பட்டது. அதனால் சிஏஏ சட்டம் தமிழகத்தில் நடைமுறையில் இல்லை.
ஆனால் இப்போது சிஏஏ சட்டத்துக்கு எதிரான தனது எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில், இப்படி அறிக்கையை தமிழக வெற்றிக்கழகம் தலைவர் விஜய் வெளியிட்டுள்ளார். இது இப்போது தேவையில்லாத ஆணி என்று அவருக்கு எடுத்துச் சொல்ல அங்கு ஆளில்லையா, என்று கலாய்த்து வருகின்றனர். விஜய் இப்படி எடுத்தோம், கவிழ்த்தோம் என எதை பற்றியும் அவசரமாக அறிக்கை விடாமல், மிக கவனமாக அறிக்கை வெளியிட வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
2021லயே #CAA-க்கு எதிரா இங்க சட்டமன்றத்துல தீர்மானம் நிறைவேத்தியாச்சு..
போன மாசம் கூட CM #NoCAAInTamilNadu னு தெளிவா சொல்லிட்டாப்ல..
இந்த Implementation News வந்த உடனே முதல்ல எதிர்த்து வந்த கண்டனக்குரல் CM கிட்டருந்து தான்..
இன்னும் யாருகிட்ட உறுதி அளிக்கணும்? 🤔 https://t.co/mysQFxSsAB
— தோழர் ஆதி (@RjAadhi2point0) March 11, 2024





