ரஜினிகாந்த் இந்த ஆண்டு மட்டும் இரண்டு திரைப்படங்களில் நடித்திருக்கிறார். இதில் அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கத்தில் நடித்த லால் சலாம் திரைப்படம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. லைக்கா நிறுவனம் இந்த திரைப்படத்தை தயாரித்திருந்தது.
மீண்டும் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலேயே அடுத்த ஒரு படத்தில் நடித்தார் ரஜினிகாந்த். ஜெய் பீம் படத்தை எடுத்த ஞானவேல் இந்த திரைப்படத்தை இயக்க, வேட்டையன் திரைப்படம் கடந்த 10 ஆம் தேதி வெளியானது. விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
வெறும் நான்கு நாட்களில் மட்டும் 240 கோடி ரூபாய் வசூலை இந்த திரைப்படம் ஈட்டி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஆயுத பூஜை விடுமுறை நாட்களில் வேட்டையன் திரைப்படத்தின் வசூல் பட்டையை கிளப்பிய நிலையில், வார நாட்களில் அதற்கான கூட்டம் குறைந்தது.
ஒரே வாரத்திற்குள் படம் இழுத்து மூடப்பட்டு விட்டதாக பலரும் இணையத்தில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், ரஜினி தனது அடுத்த திரைப்படத்தில் கவனம் செலுத்தி வருகிறார். லோகேஷ் கனகராஜ் இயக்கி வரும் இந்த திரைப்படத்திற்கு கூலி என பெயர் வைக்கப்பட்டிருக்கிறது.
தங்கக் கடத்தலை மையப்படுத்தி இந்த படத்தை லோகேஷ் கனகராஜ் எடுத்து வருகிறார். விசாகப்பட்டினத்தில் இதன் சூட்டிங் நடைபெற்று வருகிறது. இந்தப் படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் இயக்குனர் மணிரத்னத்துடன் இணைய இருப்பதாக தகவல் வெளியானது. ஏற்கனவே கமல்ஹாசனுடன் மணிரத்னம் இணைந்து தக் லைப் படத்தை எடுத்து முடித்து இருக்கிறார்.
அப்படி என்றால் அவர் மீண்டும் ரஜினியுடன் இணையலாம் என்று பலரும் கூறி வந்தார்கள். இந்தக் கூட்டணியில் 1991 ஆம் ஆண்டு வெளியான தளபதி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை ருசித்ததால், எதிர்பார்ப்பும் சற்று கூடுதலாக இருந்தது. இதுகுறித்து மணிரத்னத்தின் மனைவியும், நடிகையுமான சுஹாசினிடம் கேட்டபோது அப்படி எதுவும் திட்டம் இல்லை என்று கூறிவிட்டார். சொல்லப்போனால், இது ரஜினிக்கும் மணிரத்னத்திற்கும் தெரியுமா என்று கூட எனக்கு தெரியவில்லை என்று அவர் தெரிவித்துவிட்டார். நடிகையின் இந்த பேச்சு ரஜினி ரசிகர்களின் எதிர்பார்ப்பை முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது.





