நடிகர் தனுஷ் நடிப்பில் கடைசியாக வெளியான படம் ராயன். இந்த படம் அவரது நடிப்பில் வெளியான 50வது படம். அதே நேரத்தில் தனுஷ் இயக்கத்தில் வெளியான 2வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த படம் பிளாக் பஸ்டர் மூவியாக பெரிய வெற்றியை பெற்றது. ரூ. 155 கோடிக்கு மேல் வசூல் சாதனை புரிந்தது.
ராயன் படத்திற்கு ஏஆர் ரகுமான் இசை பெரிய பக்கபலமாக இருந்தது. வழக்கமான வன்முறை படம்தான் என்றாலும் இந்த படத்தில் செல்வராகவன், எஸ்ஜே சூர்யா, பிரகாஷ் ராஜ், துஷாரா விஜயன், அபர்ணா பாலமுரளி, சுதீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், சரவணன், வரலட்சுமி என பலரது நடிப்பும் படத்தை வேற லெவலில் ஜெயிக்க வைத்தது.
ராயன் படம் தந்த அபார வெற்றிக்கு பிறகு இப்போது படங்களில் நடிப்பதை காட்டிலும், இயக்குவதில் அதிக ஆர்வம் காட்டி வருகிறார் தனுஷ். ஏற்கனவே அவரது இயக்கத்தில் முதல் படமாக ப பாண்டி வெளியாகி வெற்றி பெற்றது. ராயன் படத்தை தொடர்ந்து 3வது படமாக தனுஷ் இயக்கத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்ற படம் வெளியாக இருக்கிறது. இதில் தனுஷின் அக்கா மகன் ஹீரோவாக நடித்திருக்கிறார்.
இதையடுத்து நடிகர் தனுஷ் இப்போது இட்லி கடை என்ற படத்தை டைரக்ட் செய்து வருகிறார். இதில் சத்யராஜ், ராஜ்கிரண் முக்கிய கேரக்டர்களில் நடிக்கின்றனர். மேலும், இந்த படத்தில் திருச்சிற்றம்பலம் படத்தை தொடர்ந்து நடிகை நித்யாமேனன் மீண்டும் தனுஷூடன் இணைகிறார். இவர் சமீபத்தில் திருச்சிற்றம்பலம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக மத்திய அரசின் சிறந்த நடிகை தேசிய விருது பெற்றவர்.
இதற்கிடையே நடிகர் தனுஷ், நேரடி தெலுங்கு படமான குபேரா படத்தில் நடித்திருக்கிறார். இது தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் என பான் இந்தியா படமாக வெளியாக இருக்கிறது. இதில் பிச்சைக்காரன் வேடத்தில் தனுஷ் நடித்துள்ளார். ராஷ்மிகா மந்தனா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கு ஸ்டார் நடிகர் நாகர்ஜூனா முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.
குபேரா படத்தின் போஸ்ட் புரடக்சன்ஸ் பணிகள் வேகமாக நடந்து வரும் நிலையில், இந்த படம் வருகிற டிசம்பர் மாதம் 27ம் தேதி ரிலீஸ் ஆக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. வழக்கமாக டிசம்பர் மாதம் என்றாலே சென்னையில் மழை கொட்டும். பல இடங்கள் வெள்ளக்காடாக மாறிவிடும். ஆண்டுதோறும் அப்படி ஒரு சென்டிமென்ட் சென்னையில் நீடிக்கும் நிலையில், வரும் டிசம்பர் 27ம் தேதி தனுஷ் நடிக்கும் குபேரா வெளியாகிறது. அந்த சென்டிமென்டில் இருந்து தனுஷ் படம் தப்புமா, என்ற கேள்வி ரசிகர்களிடையே எழுந்துள்ளது.





