நாடோடிகள் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை அபிநயா. காது கேளாத மற்றும் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளியான அவர், தனது திறமையான நடிப்பின் மூலம் பலரது பாராட்டையும் பெற்றார். தனது முதல் திரைப்படத்திலேயே, தனது அபரிமிதமான நடிப்பின் திறமையை அவர் வெளிப்படுத்தி காட்டி இருந்தார்.
அந்தத் திரைப்படத்தில் அவர் சசிக்குமாருக்கு சகோதரியாக நடித்திருப்பார். இதற்குப் பிறகு அவருக்கு, ஈசன் திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சசிகுமார் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படம், அந்த நேரத்தில் சரியாக போகவில்லை. இருப்பினும் அபிநயாவின் நடிப்பு பலரது பார்வைக்கும் சென்றது.
ஆனால் அபிநயா அதன் பிறகு தமிழ் சினிமாவில் தொடர்ந்து நடிக்கவில்லை. ஒரு சில திரைப்படங்களில் மட்டுமே வந்து போனார். சொல்லப்போனால் ஏழாம் அறிவு திரைப்படத்தில் அவர் ஒரே ஒரு காட்சியில் மட்டும் நடித்திருப்பார். போதிதர்மன் கதாபாத்திரத்தில் சூர்யா நடித்த போது அவருக்கு இணையராக அபிநயா வந்திருந்தார்.
இதன்பிறகு வீரம் திரைப்படத்திலும் அபிநயா நடித்திருப்பார். அதில் அஜித்தின் தம்பி கதாபாத்திரத்தில் பாலா நடித்திருக்க, அவருக்கு ஜோடியாக வந்து போவார் அபிநயா. ஆனால் இந்த திரைப்படங்கள் எல்லாம் அவரது நடிப்பு என்பது பெரிதாக பேசப்படவும் இல்லை கவனிக்கப்படவும் இல்லை. இதே வரிசையில் தான் குற்றம் 23, பூஜை ஆகிய திரைப்படங்களும் அமைந்தன.
இது ஒரு பக்கம் இருந்தாலும் தமிழ் சினிமா மட்டுமின்றி தெலுங்கு கன்னடா மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் அபிநயா நடித்து வந்தார். இதில் அவர் மலையாளத்தில் ஜோஜூ ஜார்ஜ் உடன் இணைந்து நடித்த பனி திரைப்படம் பெரிய அளவில் வெற்றி பெற்றது. சஸ்பென்ஸ் கலந்த ஆக்சன் படமாக அது எடுக்கப்பட்டு வரவேற்பை அள்ளியது.
இந்த நிலையில் அபிநயா ஒரு மூத்த நடிகர் உடன் ரிலேஷன்ஷிப்பில் இருப்பதாக பலரும் கூறி வந்த நிலையில், தற்போது அதற்கான பதிலை அளித்திருக்கிறார். தனது 15 ஆண்டுகால நண்பருடன் திருமணம் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இருவரும் சேர்ந்து ஆலய ஒலி மணியை அடிப்பது போன்ற புகைப்படத்தை அவர் பகிர்ந்திருக்கிறார். ஆசிர்வாதங்களை எண்ணுங்கள் என்றென்றும் இன்று தொடங்குகிறது என்று அபிநயா தனது பதிவில் குறிப்பிட்டு இருக்கிறார்.





