தமிழ் சினிமாவில் வசூல் சக்கரவர்த்தியாக இருந்து வருபவர் அஜித் குமார். அவரது நடிப்பில் வெளியாகும் திரைப்படங்கள் விமர்சன ரீதியாக வெற்றியை பெறுகிறதோ இல்லையோ, வசூல் ரீதியாக தயாரிப்பாளர்களுக்கு நிறைவை கொடுத்து விடும். கடந்த இரு மாதங்களுக்கு முன்பு வெளியான விடாமுயற்சி திரைப்படத்தை நாம் உதாரணத்திற்கு கூறலாம்.
விமர்சன ரீதியாக இந்த திரைப்படம் எந்த ஒரு தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால் அஜித் ரசிகர்களே இந்த திரைப்படத்திற்கு கலவையான விமர்சனத்தை தான் முன்வைத்தனர். இருப்பினும் விடாமுயற்சி திரைப்படத்தின் வசூல் நன்றாகவே இருந்ததாக சினிமா விமர்சகர்கள் கூறுகின்றனர்.
அதேசமயம் கடந்த பத்தாம் தேதி வெளியான அஜித்குமாரின் குட் பேட் அக்லி திரைப்படம் வசூல்மேல் வசூல் குவித்து சாதனை படைத்திருக்கிறது. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய இந்த திரைப்படத்தை, மைத்திரி மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது.
முழுக்க முழுக்க கமர்சியல் பாணியில் இந்த திரைப்படத்தை இயக்கியிருந்தார் ஆதிக். பலரும் இது ஒரு மேஷ்அப் போல் இருப்பதாக கமெண்ட் செய்தனர். படத்தில் கதை என்ற ஒன்றே இல்லை என்றும் அவர்கள் விமர்சித்தனர். ஆனால் இது எதுவும் படத்தின் வசூலை பாதிக்கவில்லை. கமர்சியல் திரைப்படத்திற்கு எதற்கு கதை என மற்றொரு தரப்பு கேள்வி எழுப்பியது.
அது மட்டுமல்லாமல் ரெட்ரோ பாடல்களும் படத்திற்கு பிளஸ் ஆக அமைய, தமிழ்நாட்டில் மட்டும் 172 கோடி ரூபாய் வசூல் செய்தது குட் பேட் அக்லி திரைப்படம். ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த திரைப்படம் 300 கோடி ரூபாய் வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இப்படியான சூழலில் வரும் மே ஒன்றாம் தேதி அஜித் தனது பிறந்த நாளை கொண்டாட இருக்கிறார்.
அதனை முன்னிட்டு வாலி திரைப்படத்தை ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கிறார்கள். முக்கியமான திரையரங்குகளில் மட்டும்தான் இந்த திரைப்படம் வெளியாகும் எனக் கூறப்படுகிறது. அண்ணன் தம்பி என இரண்டு கதாபாத்திரங்களில் அஜித் நடித்த இந்த திரைப்படம், ரசிகர்களுக்கு இன்றும் பேவரைட் ஆக உள்ளது. தற்போது இது ரீ ரிலீஸ் செய்யப்படுவதை அவரது ரசிகர்கள் கொண்டாட காத்திருக்கின்றனர்.





