தெலுங்கு சினிமாவில் மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் ரீமேக்கில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானார் துருவ் விக்ரம். அவரது தந்தை விக்ரமுக்கு சேது திரைப்படத்தின் மூலம் மிகப் பெரிய திருப்பு முனையை பாலா கொடுத்தார். இதனைத் தொடர்ந்து துருவ் விக்ரமுக்கும், பாலா தான் முதல் திரைப்படத்தை இயக்கியிருந்தார்.
வர்மா எனும் பெயரில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் தயாரிப்பு நிறுவன தரப்பிற்கு திருப்தியை கொடுக்கவில்லை. இதனால் ஒட்டுமொத்த திரைப்படத்தையும் டிராப் செய்வதாக அறிவித்து, அதிரடி அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டது. தமிழ் சினிமாவில் இதுவரை யாரும் பார்த்திராத ஒரு முடிவு அந்த திரைப்படத்தில் எடுக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மீண்டும் வேறொரு இயக்குனருடன் அர்ஜுன் வர்மா என டைட்டில் வைக்கப்பட்ட திரைப்படத்தில், நடித்தார் துருவ் விக்ரம். ஆனால் இந்த திரைப்படமும் கலவையான விமர்சனத்தை தான் பெற்றது. இதனைத் தொடர்ந்து மாரி செல்வராஜுடன் விக்ரமின் மகன் கை கோர்த்தார். பைசன் என இதற்கு பெயர் வைக்கப்பட்டது.
கபடி விளையாட்டை மையப்படுத்தி இந்த திரைப்படம் எடுக்கப்பட்டதால், அந்த விளையாட்டு பயிற்சியில் அதிக கவனம் செலுத்தினார் துருவ். திருநெல்வேலி சுற்றுவட்டார பகுதியை மையமாக வைத்து இந்த திரைப்படம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதில் அனுபமா பரமேஸ்வரன், ரஜிஷா விஜயன், பசுபதி, லால், கலையரசன் உள்ளிட்ட ஏராளமான நடித்திருக்கிறார்கள்
வரும் தீபாவளிக்கு இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. அண்மையில் இந்த திரைப்படத்தை பார்த்த தயாரிப்பு நிறுவனம், பைசனை பாராட்டியது. அனைத்து விதத்திலும் அந்த திரைப்படம் சூப்பராக இருப்பதாகவும் கூறியது. இப்படியான சூழலில், துருவ் விக்ரமின் அடுத்த திரைப்படம் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதில் அவர் அடுத்ததாக மணிரத்னம் இயக்கத்தில் நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது. இதேபோல் தெலுங்கு இயக்குனர் ரமேஷ் வர்மா இயக்கத்திலும் நடிக்க இருக்கிறார் துருவ். பாலிவுட் திரைப்படமான கில் திரைப்படத்தின் ரீமேக்காக இது எடுக்கப்படுகிறது. இதில் வில்லனாக உறியடி இயக்குனர் விஜயகுமார் நடிக்க இருக்கிறார். படத்தில் அனுபமா பரமேஸ்வரன், கயாடு லோகர் உள்பட மூன்று ஹீரோயின்கள் நடிக்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.





