நடிகர் ரஜினிகாந்த் நடித்த கூலி படம் இன்று உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகியிருக்கிறது. இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அனிருத் இசையில் உருவான இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. மல்டிபில் ஸ்டார்ஸ் நடித்த இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்பதே கசப்பான உண்மை.
குறிப்பாக கூலி படத்தின் திரைக்கதையில் நிறைய லாஜிக் மிஸ்டேக்குகள் இருக்கின்றன. படத்தில் உள்ள பல காட்சிகளுக்கு பின்னணி விளக்கமோ காரணமோ இல்லாமல் படம் பார்க்கும் ரசிகர்கள் குழம்பி போய்விடுகின்றனர். குறிப்பாக ரஜினி மகளை சத்யராஜ் ஏன் வளர்க்கிறார் என்று தெரியவில்லை. ரஜினி மனைவி கேரக்டர் குறித்து எந்த ஒரு காட்சியும் இல்லை.
குறிப்பாக ஸ்ருதிஹாசனை ரஜினி சந்திக்கும் முதல் காட்சியில் ரஜினியிடம் ஏன் அவர் கோபமாக பேசி அவரை வெளியே போங்க என விரட்டுகிறார் என்பதற்கும் காரணம் கூறவில்லை. கூலியாக இருக்கும் ரஜினி எப்படி சொந்தமாக மேன்சன் நடத்துகிறார், ரஜினி சத்யராஜ் ஏன் பிரிந்திருக்கின்றனர் என்பதற்கான காரணங்களும் படத்தில் இல்லை.
இந்த படத்தில் உள்ள மற்றொரு முக்கியமான விஷயம், கப்பல் துறைமுகத்தில்தான் வில்லன்கள் நாகர்ஜூனா, செளபின் சாஹிர் இருக்கின்றனர். ஹார்பரில் ஒரு தனி சாம்ராஜ்ஜியமே அவர்கள் நடத்துகின்றனர். அப்படிப்பட்டவர்கள் செய்யும் கொலைகளை, அந்த உடல்களை கடலுக்குள் கல்லை கட்டி வீசி விட்டால் மீன்களுக்கு உணவாகி விடும். இது சிம்பிள் லாஜிக்.
ஆனால் கூலி படத்தில் கொல்லப்படும் ஆட்களின் சடலங்களை சத்யராஜ் மூலமாக தான் அவர்கள் எரித்து சாம்பலாக்குகின்றனர். இது லாஜிக்கே இல்லாத ஒன்று. கடலுக்குள் வீசப்படும் மனித உடல்களை மீன்கள் அழித்துவிடும் என்னும் போது எதற்காக அவர்கள் சத்யராஜின் மின்சார நாற்காலியை பயன்படுத்த ஆர்வம் காட்ட வேண்டும் என்பது பெரிய லாஜிக் மிஸ்டேக் ஆக உள்ளதாக ரசிகர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இப்படி படம் முழுக்கவே நிறைய லாஜிக் மிஸ்டேக்குகளை அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையில் போலீஸ் இன்பார்மர்களாக அந்த கேங்க்ஸ்டர் கூட்டத்துக்குள் ரகசியமாக வந்து சேரும் சௌபின் சாஹிர், அவரது மனைவி ரக்சிதா ராம் இருவரையும் அவர்களை அங்கு அனுப்பிய போலீஸ் உயரதிகாரிகள் எதுவுமே கேட்க மாட்டார்களா, 8 ஆண்டுகளாகியும் அந்த குரூப்பை போலீஸ் அரஸ்ட் செய்யாமல் அப்படியே இருப்பார்களா என்பதும் பெரிய கேள்வியாக உள்ளது. இப்படி பல லாஜிக் மிஸ்டேக்கை கண்டுபிடித்து ஏம்பா, இதை எல்லாம் பார்க்கவே மாட்டீங்களா என்று படக்குழுவினரை, ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.





