தமிழ் சினிமாவில் கடந்த 1980 – 90களில் முன்னணி இயக்குனராக வலம் வந்தவர் எஸ்பி முத்துராமன். தமிழில் 75க்கும் மேற்பட்ட படங்களை டைரக்ட் செய்தவர். தமிழ் சினிமாவில் ஒரு தரமான இயக்குனர் என்ற தனிமுத்திரை பதித்தவர். நடிகர்கள் ரஜினிகாந்த் கமல்ஹாசன் நடித்த பல வெற்றிப் படங்களை இயக்கியவர் எஸ்பி முத்துராமன்.
குறிப்பாக நடிகர் ரஜினிகாந்தை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியதில் இயக்குனர் எஸ்பி முத்துராமனுக்கு பெரிய பங்கு உண்டு. ஆரம்பத்தில் கவிஞர் கண்ணதாசன் நடத்திய பத்திரிகை ஒன்றில் உதவி ஆசிரியராக பணிபுரிந்த எஸ்பி முத்துராமன் அதன்பிறகு ஏவிஎம் ஸ்டுடியோவில் உதவி இயக்குனராக பணி செய்தார்.
கிருஷ்ணன், பஞ்சு அருணாசலம் போன்ற பெரிய இயக்குனர்களிடம் உதவி இயக்குனராக எஸ்பி முத்துராமன் பணிபுரிந்த நிலையில் கடந்த 1972ம் ஆண்டு வெளியான கனிமுத்து பாப்பா என்ற படத்தின் மூலம் இயக்குனராக எஸ்பி முத்துராமன் அறிமுகமானார். அவர் இயக்கிய படங்கள் அனைத்தும் வணிகரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரிய அளவில் வெற்றிகளை குவித்தது.
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்பி முத்துராமன் இயக்கிய பல படங்கள் பெரிய வெற்றியைப் பெற்றன. முரட்டுக்காளை போக்கிரி ராஜா பாயும் புலி துடிக்கும் கரங்கள் நல்லவனுக்கு நல்லவன் மிஸ்டர் பாரத் வேலைக்காரன் குரு சிஷ்யன் தர்மத்தின் தலைவன் போன்ற படங்களை எஸ்பி முத்துராமன் இயக்கினார்.
சமீபத்தில் ஒரு விழாவில் பேசிய இயக்குனர் எஸ்பி முத்துராமன் கூறியதாவது, எம்ஜிஆர் முதலமைச்சராக இருந்தபோது ஏவிஎம் ஸ்டுடியோவில் ஒருமுறை படம் பார்ப்பதற்காக வந்தார். படத்தை பார்த்துவிட்டு வெளியே வந்த போது அங்கிருந்த அனைவரையும் அவர் நலம் விசாரித்துக்கொண்டே வந்தார். அப்போது நான் உதவி இயக்குனராக இருந்தேன். ஒரு ஓரமாக நின்று கொண்டிருந்தேன்.
என்னை பார்த்த எம்.ஜி.ஆர் உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். நான் யோசித்துவிட்டு, உங்க வீட்டில் இருந்து சிக்கன் நெய் ரோஸ்ட் வரும் அல்லவா? அது எனக்கு வேண்டும் என்று கேட்டேன். அதற்கு எம்ஜிஆர், எல்லோரும் என்னென்னவோ என்னிடம் கேட்கிறார்கள். நீ இப்படி கேட்கிறாயே என்று சிரித்துவிட்டு போய்விட்டார். அடுத்த நாளே எம்.ஜி.ஆர் வீட்டில் இருந்து ஒரு கேரியரில் சிக்கன் நெய் ரோஸ்ட் எனக்கு வந்துவிட்டது என்று அந்த விழாவில் இயக்குனர் எஸ்பி முத்துராமன் பேசியிருக்கிறார்.





