தமிழ் சினிமாவில் சுப்ரமணியபுரம் படத்தில் இயக்குனராக அறிமுகமாகி வெற்றி பெற்றவர் சசிக்குமார். பிறகு நடிகராகவும் தயாரிப்பாளராகவும் அவர் பல வெற்றிப் படங்களை கொடுத்தார். அவர் நடித்த டூரிஸ்ட் ஃபேமிலி படம் கடந்தாண்டில் வெளியாகி பெரிய வரவேற்பை பெற்றது. இந்த படம் 2026 ஆஸ்கர் விருதுக்கான தேர்வு பட்டியலில் இருப்பதும் குறிப்பிடத்தக்கது.
சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் சசிகுமார் ஹீரோவாக நடித்த படம் நந்தன். இந்த படத்தை இயக்கியவர் சரவணன். தற்போது சங்காரம் என்ற புத்தகத்தை இயக்குனர் சரவணன் எழுதியுள்ளார். இந்த நூலின் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. இதில் நடிகர்கள் சசிகுமார் சூரி மற்றும் நக்கீரன் கோபால் உள்ளிட்டோர் கலந்துக்கொண்டனர்.
இந்த விழாவில் நடிகர் சசிகுமார் பேசியதாவது, நந்தன் படத்தில் ஒரு சிறிய கேரக்டரில் தான் நடிப்பதற்கு நான் சென்றேன். அப்போது ஏற்கனவே படத்தில் கமிட் ஆகியிருந்த ஹீரோவுக்கும் இயக்குனருக்கும் ஏதோ பிரச்சனை என்று ஷூட்டிங் நடக்காமல் நின்று விட்டது. அந்த நேரத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் டைரக்டர் சரவணன் குழப்பத்தில் இருந்தார்.
அப்போது இந்த படத்தில் நானே ஹீரோவாக நடிக்கிறேன் என்று அவரிடம் சொன்னேன். ஆனால் அந்த கேரக்டருக்கு நான் சரியாக இருப்பேனா என்கிற குழப்பம் இருந்தது. உடனே எனக்கு ஒரு வாரம் டைம் கொடுங்க. அந்த கேரக்டருக்கு நான் தயாராகி விடுகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த 7 நாட்களும் என் நிறத்தை மாற்றிக்கொண்டு நந்தன் கதாபாத்திரத்திற்கு தயாராகி நடித்தேன்.
நந்தன் படம் எடுத்து முடித்த பிறகும் படம் வெளியிடுவதில் பல பிரச்னைகள் இருந்தது. எப்படியோ அனைவரும் சேர்ந்து அந்த படத்தை வெளியிட்டோம். அந்த படம் எனக்கு ஒரு நல்ல பெயரை வாங்கிக் கொடுத்தது. இன்றும் நந்தன் படம் என்ன செய்கிறது என்றால் ஆகஸ்ட் 15ம் தேதி கொடி ஏற்ற முடியாமல் தவித்த தலித் பஞ்சாயத்து தலைவர்கள் அனைவரும் கொடியேற்றுவதை ஆன்லைனில் பார்க்க வேண்டும் என்று ஒரு அரசாணை வெளியிட்டுள்ளது. இதை ஒருவர் போன் செய்து கண்ணீருடன் என்னிடம் கூறினார்.
இதைக் கேட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன். காசும் பணமும் கொடுக்காத சந்தோஷத்தை அந்த கண்ணீர் எனக்கு கொடுத்தது. அது ஆஸ்கர் விருது வாங்கியதற்கு சமம். அதை நான் இந்த படத்தின் மூலம் பெற்றுவிட்டேன். ஒரு படம் என்ன செய்ய வேண்டுமோ அதை நந்தன் படம் செய்து காட்டியது. சரவணன் எப்போதும் வியாபார ரீதியாக எந்த படத்தையும் எடுக்க மாட்டார். அவர் பத்திரிகையாளராக சமூகம் சார்ந்த விஷயங்களை எழுதி வந்ததால் அப்படி தான் அவர் படமும் எடுக்கிறார். அவர் எழுதிய சங்காரம் புத்தகத்தைபடமாக எடுத்தால் அதுவும் அருமையாக இருக்கும் என்று நடிகர் சசிகுமார் பேசினார்.





