தமிழ் சினிமாவில் ஆரம்பத்தில் பல வெற்றிப் படங்களை கொடுத்தவர் நடிகர் சூர்யா. ஆனால் கடந்த 12 ஆண்டுகளாக நடிகர் சூர்யாவுக்கு மிகப்பெரிய வெற்றி படம் எதுவுமே இல்லை. இந்த 12 ஆண்டுகளில் அவர் நடித்த 10க்கும் மேற்பட்ட படங்களில் ஜெய்பீம் சூரரைப் போற்று ஆகிய 2 படங்கள் மட்டுமே ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியாகி வணிக ரீதியான வெற்றிப் படங்களாக இருந்தன.
ஆனால் சிங்கம் 3 பசங்க 2 எதற்கும் துணிந்தவன் தானா சேர்ந்த கூட்டம் என்ஜிகே மாசு என்கிற மாசிலாமணி 24 காப்பான் அஞ்சான் கங்குவா என சூர்யா நடித்த 10 படங்கள் தொடர்ந்து தோல்வியை தழுவின. கடைசியாக சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரெட்ரோ படம் கடந்த ஆண்டு மே 1ம் தேதி வெளியானது.
இந்தப் படமும் வியாபார ரீதியாக வெற்றிப் படம் என்றாலும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் இந்த படம் வரவேற்பை பெறவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இதைத்தொடர்ந்து நடிகர் சூர்யா நடித்த கருப்பு விஸ்வநாத் அண்ட் சன்ஸ் ஆகிய படங்களும் இன்னும் ரிலீஸ் ஆகவில்லை. இப்போது மலையாள இயக்குனர் ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47 என்ற படத்தில் இப்போது நடித்து வருகிறார்.
நடிகர் ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் உருவான கருப்பு படம் கடந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தீபாவளிக்கு ஜனநாயகன் ரிலீஸ் என்றதால் கருப்பு படம் தள்ளிப்போனது. ஆனால் ஜனநாயகன் படம் தீபாவளிக்கும் வரவில்லை; தொடர்ந்து பொங்கலுக்கும் வரவில்லை. அதனால் பொங்கல் களத்திலும் கருப்பு படம் ரிலீசாகவில்லை.
இந்த சூழ்நிலையில் தொடர்ந்து பல மாதங்களாக கருப்பு படம் ரிலீஸ் தள்ளிப் போய்க் கொண்டே இருக்கிறது. இதற்கிடையே வருகிற ஏப்ரல் 10ம் தேதி அல்லது 17ம் தேதி இந்த இரண்டு தேதிகளில் ஏதாவது ஒரு நாள் கண்டிப்பாக கருப்பு படம் ரிலீஸ் ஆகும் என்று உறுதியான தகவல் வெளியானது. ஆனால் இப்போது வந்த லேட்டஸ்ட் தகவலின்படி கருப்பு படம் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
இன்னும் சில தினங்களில் தமிழக சட்டசபை தேர்தல் அறிவிக்கப்பட உள்ளது. ஏப்ரல் இறுதியில் சட்டசபை தேர்தல் என்றும் மே 2ம் தேதி வாக்கில் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அதனால் கருப்பு படம் வருகிற மே மாதம் 2வது வாரத்தில் ரிலீஸ் என்ற முடிவுக்கு பட குழு வந்துள்ளது. இப்படி தொடர்ந்து கருப்பு படம் ரிலீஸ் தள்ளி வைக்கப்படுவதால் சூர்யா ரசிகர்கள் விரக்தியின் உச்சத்தில் இருக்கின்றனர். கருப்பு படம் எப்போது திரைக்கு வரும் என்று வெறுப்புடன் கேள்வி கேட்டு வருகின்றனர்.





