இயக்குனர் மணிவண்ணன் இயக்கத்தில் கடந்த 1994ம் ஆண்டில் வெளியான படம் அமைதிப்படை. இதில் சத்யராஜ் அப்பா மகன் என்ற இரண்டு வேடங்களில் நடித்திருந்தார். நாகராஜன் சோழன் என்கிற அமாவாசை கேரக்டரில் அரசியல்வாதியாக சத்யராஜின் நடிப்பு இன்றும் பேசப்படும் ஒரு அழுத்தமான கேரக்டராக உள்ளது.
மேலும் அமைதிப்படை படத்தில் ரஞ்சிதா சுஜாதா கஸ்தூரி காந்திமதி எஸ்எஸ் சந்திரன் ஆர்சுந்தர்ராஜன் மலேசியா வாசுதேவன் சிஆர் சரஸ்வதி அல்வா வாசு உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்களில் நடித்திருந்தனர். 32 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதிப்படை படம் வருகிற ஏப்ரல் 10ம் தேதி ரீ ரிலீஸ் செய்யப்படுகிறது.
அமைதிப்படை படம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த நடிகை கஸ்தூரி கூறியதாவது, இன்றைக்கும் என்னை தாயம்மா என்று சமூக வலைதளங்களில் குறிப்பிட்டு பேசுகிறார்கள். இப்படி பண்ணலாமா தாயம்மா என்றும் கிண்டல் செய்கிறார்கள். அதற்கு காரணம் அமைதிப்படை படம்தான். அந்த படத்தில் இடம்பெற்ற அல்வா காட்சியும் ரசிகர்கள் மத்தியில் பெரிய அளவில் பிரபலமாகி விட்டது.
32 ஆண்டுகளுக்குப் பிறகு அமைதிப்படை படம் மீண்டும் ரி ரிலீஸாவது மகிழ்ச்சி அளிக்கிறது. அந்த படத்தில் பங்கேற்ற பலர் கைலாசம் போய் விட்டார்கள். நடிகை ரஞ்சிதா கைலாசம் சென்றுவிட்டார். எனக்கு பகுத்தறிவு ஊட்டிய ஆசான் மணிவண்ணன். நிறைய புத்தகங்கள் கொடுத்து படிக்க சொல்வார். கடைசியில் புதுமைப்பித்தன் கதை தொகுப்பு கொடுத்தார்.
இயக்குனர் மணிவண்ணன் கதை சொல்ல மாட்டார். முன்பே டயலாக் கொடுக்க மாட்டார். படப்பிடிப்பு தளத்தில் தான் அனைத்தும் டெவலப் ஆகும். அதற்கேற்ப நாம் நடிப்பில் தயாராகணும். மணிவண்ணன் இயக்கத்தில் நடிப்பது என்பது வரம். அமைதிப்படை படத்தை இந்தி ஒரியா பெங்காளி சிங்களம் உட்பட பல மொழிகளில் எடுத்தனர். குறிப்பாக தமிழக அரசியலுடன் நெருக்கமான படமாக இருந்தது.
இப்போது கூட அரசியல் விஷயங்களை இந்த படத்தில் வெகுவாக ரசிக்கலாம். அமைதிப்படை படத்தில் சீமான் ராசு மதுரவன் செல்வபாரதி சுந்தர் சி ஆகியோர் உதவியாளர்களாக பணியாற்றினார்கள். மணிவண்ணன் ஒரு ஆலமரம். பல இயக்குனர்களை, நடிகர்களை அவர் உருவாக்கி இருக்கிறார் என்று நடிகை கஸ்தூரி செய்தியாளர்களிடம் கூறினார்.





